india

img

கொல்கத்தா பெண் மருத்துவரின் புகைப்படத்தை நீக்க விக்கிப்பீடியாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை நீக்க விக்கிப்பீடியாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9 அன்று, மருத்துவமனையின் கருத்தரங்க அறையில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 13 அன்று இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி, கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மறுபுறத்தில், உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தை தாமே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் 9-ஆம் நடந்த விசாரணையில், வன்கொலையான மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சமூக வலைதளங்களில் இருந்து அவர்களது புகைப்படங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, ​​இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விக்கிப்பீடியாவில் இன்னமும் பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் புகைப்படம் உள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார். அப்போது, பெண் பயிற்சி மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை நீக்க விக்கிப்பீடியாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.