india

img

கிளிமாஞ்சாரோ சிகரத்தை அடைந்த தெற்காசியாவின் முதல் இந்தியச் சிறுவன்

சண்டிகர், ஆக.27 - தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவர். பஞ்சாப் மாநிலம் ரோபரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தேக்பீர் சிங், ஆப்பிரிக்கக் கண்டத்து நாடான தான்சானியாவில் உள்ள மிக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவை அடைந்து  சாதனை படைத்துள்ளார்.

இந்த மலை தான்சானியாவில் 19,340 அடி (5895 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. தேக்பீர் சிங் தனது மலையேற்றத்தை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கினார். ஆகஸ்ட் 23 ஆம் தேதி இம்மலையின் முகட்டுப் பகுதியான உஹுரு சிகரத்தை அடைந்தார்.  கிளிமாஞ்சரோ மலைப்பகுதியில் ஆக்சிஜஜேனற்றம் மிகக் குறைவாக இருக்கும். எனவே உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இருப்பினும் அனைத்து சவால்களையும் கடந்து தேக்பீர் சிங் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தெற்காசிய நாடுகளிலிருந்து இந்த சிகரத்தை அடைந்த முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் கிளிமாஞ்சரோவை சென்றடைந்த போது அங்கு வெப்பநிலை -10 டிகிரி செல்சியசாக இருந்துள்ளது.  சாதனை படைத்த தேக்பீர் சிங் ரோபரில் உள்ள ஷிவாலிக் பப்ளிக் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.

தனது சாதனை குறித்துப் பேசிய தேக்பீர் சிங், தனது வெற்றிக்குக் காரணம், தமது பயிற்சியாளர் பிக்ரம்ஜித் சிங் குமான்தான் என்றார். பிக்ரம்ஜித் சிங் குமான் ஓய்வுபெற்ற ஹேண்ட்பால் பயிற்சியாளர். தேக்பீர் சிங்கின் தந்தை சுகிந்தர்தீப் சிங் கூறுகையில், “எனது மகன் இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே தயாரானார். குறிப்பாக இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

 ஒவ்வொரு நாளும் எனது மகன் 8-10 கிலோ மீட்டர் வரை மலையேற்றம் செய்தான்.  மலையேறும் ஒவ்வொரு முறையும் வெப்பநிலை குறைந்தது. ஆக்சிஜனேற்றம் குறைவாக உள்ள பகுதியில் (மைனஸ் தர வெப்பநிலையில்) கிட்டத்தட்ட ஒரு வார காலம் தங்கி பயிற்சி பெற்றான்” என்றார். இவருக்கு முன், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி செர்பியா நாட்டைச் சேர்ந்த சிறுவர் ஓக்ன்ஜென் ஜிவ்கோவிச் தனது ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.