india

img

கேரளம் முன்வைக்கும் மாற்றுக் கொள்கை பட்ஜெட்டில் தெரிகிறது: எம்.வி.கோவிந்தன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் முன்வைத்துள்ள உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு மாற்றாக கேரள மாநில பட்ஜெட் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பட்ஜெட், அரசாங்கம் அனைத்துத் துறைகளிலிருந்தும் விலகி, நிதி மற்றும் மூலதன சக்திகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் அணுகுமுறையை முன்மொழிந்தது. அதற்கு நேர்மாறாக, அரசின் தலையீட்டை உறுதிசெய்து புதிய சாத்தியக்கூறுகளைக் காண்பதுதான் மாநில பட்ஜெட்டின் அணுகுமுறை. உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதற்கான தேர்தல் அறிக்கையின் அமலாக்கம் பட்ஜெட் முழுவதும் தெரிகிறது.

விவசாயத் துறையை கார்ப்பரேட்மயமாக்க ஒன்றிய பட்ஜெட் முன்மொழிகிறது. மறுபுறம், கேரள மாநில பட்ஜெட் விவசாயத் துறையில் அதிக முதலீட்டை உறுதி செய்கிறது. ரப்பர் துறையை ஒன்றிய அரசு கைவிட்டபோது, மாநில பட்ஜெட்டில் மானியம் ரூ.180 கோடியாக உயர்த்தப்பட்டது. ஒன்றிய பட்ஜெட் பொதுத்துறை நிறுவனங்களை விற்று முன்னேற வேண்டும் என்கிறது; பொதுத்துறையை பாதுகாக்கும் அணுகுமுறையை மாநில பட்ஜெட் கொண்டுள்ளது.

ஒன்றிய பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சமூக நலத்திட்டங்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கான தொகை குறைக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களுக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இத்துறைகளுக்கான தொகையை உயர்த்த கேரள மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ‘லைப்’ வீட்டு வசதி திட்டத்திற்காக மட்டும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.10,000 கோடிக்கான கட்டுமானப் பணிகளை இலக்காக்கி அனைவருக்கும் வீடுகளை உறுதி செய்திருப்பது இடதுஜனநாயக முன்னணி அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

ஒன்றிய அரசின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையிலும் நலத்திட்ட ஓய்வூதியங்களை விநியோகிக்கும் முடிவையும் கேரள பட்ஜெட் அறிவித்தது. நாடு முழுவதும் உருவாகி வரும் மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்துக்கு கேரள பட்ஜெட் வலு சேர்க்கும்.