இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 11,502 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,95,877 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,35,598 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,28,318 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 11,502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,69,798 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,53,106 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,07,958 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,950 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 44,661 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 435 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 41,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,327 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 23,544 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,477 பேர் உயிரிழந்துள்ளனர்.