விடுதலைப் போராட்ட வீரரும், தொழிலாளர்கள், விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான மோளிப்பள்ளி வி.ராமசாமியின் நூற்றாண்டு துவக்க விழா, அவர் பிறந்த தினமான ஜனவரி 8 ஆம்தேதி அன்று நாமக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி நிகழ்விற்கு தலைமை வகித்தார். மூத்த தலைவர் பி.செங்கோடன் கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.தங்கராஜ் ஆகியோர் நினைவு மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்களுக்கு தோழர் வி.ராமசாமி நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், ந.வேலுச்சாமி, கே. தங்கமணி ,பி.ஜெயமணி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி, வர்க்க வெகுஜன அரங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.