புதுதில்லி, டிச. 24 - டாக்டர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என வலி யுறுத்தி டிசம்பர் 30 அன்று நாடு தழுவிய கிளர்ச்சிப் போராட்டத்திற்கு இடது சாரிக் கட்சித் தலைவர்கள் அறை கூவல் விடுத்துள்ளனர்.
இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் கூட்டம், ஞாயிறன்று புதுதில்லியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் து. ராஜா, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ் ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செய லாளர் ஜி. தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளி யிட்டனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்து அவ மரியாதையாகவும், இழிவாகவும் கூறிய கருத்துக்களை எதிர்த்து நாடு முழுதும் மக்கள் கிளர்ந்தெழுந்ததை இக்கூட்டம் பதிவு செய்கிறது. எனினும், அமித் ஷாவோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியோ இதற்கான பொறுப்பை ஏற்கவோ, இதனை சரி செய்திடவோ முன்வரவில்லை.
எனவே, இதற்கெதிராக நடை பெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங் களைத் தொடர்வது என்றும், அனை வரும் ஒன்றிணைந்து டிசம்பர் 30 அன்று எதிர்ப்பு நாள் கடைப்பிடிப்பது என்றும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டாகத் தீர்மானித்திருக்கின்றன. நாடு தழுவிய அளவில் நடைபெறும் அன்றைய கிளர்ச்சிப் போராட்டத்தன்று ‘உள்துறை அமைச்சர் அமித் ஷாவே ராஜினாமா செய்’ என்கிற கோரிக்கை வலியுறுத்தப்படும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம்
நாடாளுமன்றத்தில் அரசமைப்புத் திருத்தச் சட்டமுன்வடிவு மற்றும் இரண்டு சட்டமுன்வடிவுகள் மூலமாக முன்வைக்கப்படும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை இடதுசாரிக் கட்சி கள் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கின்றன. முன்மொழியப் பட்டுள்ள இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் கூட்டாட்சி அமைப்பு முறை மீதும், மாநில சட்டமன்றங்களின் உரிமைகள் மீதும் மற்றும் அவர் களைத் தேர்ந்தெடுத்திடும் மக்கள் மீதும் நேரடியாக ஏவப்பட்டுள்ள தாக்குதல் களாகும். இது, சட்டமன்றங்களின் ஐந்தாண்டுக் காலத்தைத் தன்னிச்சை யாகக் குறைப்பதன் மூலம் மக்களின் விருப்பத்தை மையப்படுத்துவதற்கும், துண்டிப்பதற்குமான நடவடிக்கை யாகும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.
மக்களின் உரிமையைப் பறித்த தேர்தல் ஆணையம்
அதேபோன்று சிசிடிவி கேமரா, வீடியோ காட்சிகள் போன்ற மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்ய தேர்தல் நடத்தை விதிகளில் உரிமை அளிக்கப்பட்டிருந்தது, தற் போது தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பதை மீண்டும் அளித்திட வேண்டும் என்றும் இடது சாரிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.
இடதுசாரிக் கட்சிகளின் ஒன்றுபட்ட தலையீடு
வரவிருக்கும் நாட்களில் அரசியல் மற்றும் மக்கள் பிரச்சனைகள் மீது ஒன்றுபட்ட இடதுசாரிக் கட்சிகள் தலை யீடுகளை முடுக்கிவிடுவது என்றும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அடிக்கடி கூட்டங்கள் நடத்துவது என்றும், அதில் இடதுசாரிக் கொள்கை களை முன்னிலைப்படுத்தி, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)