புதுதில்லி, டிச.4-
ஆட்சியாளர்கள் மக்களின் நலன்களுக்காக த்தான் ஆட்சி புரிய வேண்டுமேயொழிய, கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக அல்ல என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் முனைவர் வி.சிவதாசன் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் 2024ஆம் ஆண்டு எண்ணெய்வயல்கள் (முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி) திருத்தச் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் முனைவர் வி.சிவதாசன் அதில் பங்கேற்றுப் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி மிகவும் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமாகும். ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அரசாங்கம் தன் நாட்டு மக்களின் நலனை உத்தரவாதப்படுத்திட வேண்டும். ஆனால், இங்கே என்ன நிலைமை? இங்கேயுள்ள ஒன்றிய அரசாங்கம் வேறு வித்தியாசமான திசையில் நடந்துகொண்டிருக்கிறது. நம் நாட்டின் அபரிமிதமான வளங்களை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு உட்பட நம் நாட்டின் இயற்கை வளங்களை, தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது.
கொள்ளை லாபமே குறிக்கோள்
பன்னாட்டு நிறுவனங்களின் ஒரே குறிக்கோள் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி மற்றும் விநியோகம் மூலமாக கொள்ளை லாபம் ஈட்டவேண்டும் என்பது மட்டுமேயாகும். இதன் உற்பத்தி விலையையும், சந்தையில் இவை விற்கப்படும் விலையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இதனை நன்கு புரிந்துகொள்ள முடியும். சாமானிய மக்கள் சுரண்டப்படுதலை ஒன்றிய அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. பெட்ரோலியப் பொருள்களின் விலையை அரசாங்கம் கட்டுப்படுத்திட வேண்டும். அதற்கு அளித்து வந்த மானியங்களை மீண்டும் அளித்திட வேண்டும், மேலும் அதிகப்படுத்திடவும் வேண்டும்.
இந்தியாவிலேயே அதிகவிலை
உலகத்தில் உள்ள விலைகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் பெட்ரோலியப் பொருள்களின் விலை மிகவும் அதிகமாகும். பெட்ரோலியப் பொருட்களின் மீது ஒன்றிய அரசாங்கம் அதிகமாக வரிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறது. 2008 ஜூனில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 202 அமெரிக்க டாலராக இருந்தது. அந்த சமயத்தில் இந்தியாவில் பெட்ரோலின் விலை 50 ரூபாயாகவும், டீசல் 37 ரூபாயாகவும் இருந்தது. அந்த சமயத்தில் இப்போது ஆளும் கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார்கள். இந்தப் பிரச்சனையை மக்கள் முன் எடுத்துச் சென்றார்கள். இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 68 அமெரிக்க டாலராக இருக்கிறது. 2008ஆம் ஆண்டிலிருந்த விலையைக் காட்டிலும் 30 விழுக்காடு குறைவு. எனினும் இன்றைய தினம் இந்தியாவில் பெட்ரோலின் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.
அதீத வரி விதிப்பு
ஏன் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது? ஏனெனில் ஒன்றிய அரசாங்கம் இவற்றின் மீது விதித்துள்ள அதீத வரிகளே காரணமாகும். எண்ணெய் விலை மீது அரசாங்கம் பல்வேறு வடிவங்களில் வரிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறது. 2019-20இல் அது 3.3 லட்சம் கோடி ரூபாயாகும். 2020-21இல் அது 4.55 லட்சம் கோடி ரூபாய். 2021-22இல் அது 4.92 லட்சம் கோடி ரூபாய். இப்போது, அதன் மொத்த தொகை 6 லட்சம் கோடி ரூபாயாகும். இதனை அனுமதிக்கக் கூடாது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2014 மார்ச் 1 அன்று 14.2 கிலோ கிராமுக்கு 410 ரூபாயாக இருந்தது. இப்போது அது 823 ரூபாயாக மாறியிருக்கிறது. அரசாங்கம் சாமானிய மக்களின் நலன்களைப் பாதுகாத்திட வேண்டும். அவர்கள் மக்களுக்காகத்தான் ஆட்சி செய்ய வேண்டுமேயொழிய, கார்ப்பரேட்டுகளுக்காக அல்ல.
இவ்வாறு முனைவர் வி.சிவதாசன் பேசினார்.