ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உள்பட 5 பேரை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை விடுதலை செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜி.என்.சாய்பாபா உள்பட 5 பேரை மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி மகாராஷ்டிரா அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் நியாயமானதாக இருப்பதை காண்பதாகவும், தீர்ப்பில் தலையிடுவதற்கான காரணங்கள் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாய்பாபா உள்பட 5 பேர் 2014-ஆம் ஆண்டு முதல் நாகபுரி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் 5 பேருக்கும் 2017-இல் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2022-இல் உயர்நீதிமன்றம் சாய்பாபாவை விடுதலை செய்தது.
பின்னர், மகாராஷ்டிரா அரசு மேல் முறையீடு செய்ததில், இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் 2023 ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாகபுரி கிளை நீதிமன்ற நீதிபதிகள் வினய் ஜோஷி, வால்மீகி எஸ்.ஏ.மெனேசஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு சாய்பாபா உள்ளிட்ட 5 பேரையும் கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.