பிளிப்கார்ட் நிறுவனம் தான் வெளியிட்ட மகளிர்தின வாழ்த்துக்கு தானே மன்னிப்பு கேட்டுள்ளது.
வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி. இதையடுத்து 1975ம் ஆண்டு ஐ.நா சபை மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து பிளிப்கார்ட் சமையலறை உபகரணங்களுக்கு சிறப்பு தள்ளுபடி என அறிவித்து மகளிர் தின வாழ்த்து செய்தியையும் தெரிவித்தது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த விளம்பரம் பெண்கள் என்றாலே சமையலறை என்று கண்ணோட்டத்தை கொண்டுள்ளதாக பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து வேறுவழியின்றி பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாழ்த்து செய்தியை திரும்ப பெற்றுக்கொண்டது. நாங்கள் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தோடு இதைச் செய்யவில்லை. முன்னதாக வெளியிட்ட மகளிர் தின வாழ்த்து செய்திக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.