புதுதில்லி, ஏப்.8- தகவல் தொழில்நுட்ப விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுக்கு, தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் பத்திரிகை தகவல் பணியகத்திற்கு அளவிடமுடியாத அளவிற்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பது, அதன் இயற்கைத் தன்மையையே மாற்றியமைத்திடும் என்று தில்லி பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எஸ்.கே. பாந்தே மற்றும் செயலாளர் சுஜாதா மதோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பத்திரிகை தகவல் பணியகத்தின் பங்களிப்பு என்பது, அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து செயல்படுவதாகும். ஒன்றிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தகவல்களைப் பரப்புதல், ஊடகங்களுக்கு இது தொடர்பாக வசதி செய்து கொடுத்தல் மற்றும் அங்கீகாரம் அளித்தல் என்பவைகளாகும் என்று பத்திரிகை தகவல் பணியகத்தின் இணைய தளத்தில் அதன் பங்கு மற்றும் செயல்பாடுகள் என்னும் தலைப்பின்கீழ் குறிப்பிட்டிருக்கிறது.
பொய் செய்திகளை அல்லது தவறான செய்திகளை அல்லது திசைதிருப்பும் விதத்தில் அமையும் செய்திகளை (fake, or false, or misleading information) சரிபார்க்கிறோம் என்ற பெயரில் பத்திரிகை தகவல் பணியகத்திற்கு கட்டுப்பாடற்ற முறையில் ஒழுங்குமுறை அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பத்திரிகை தகவல் பணியகம் என்பது புதிய தணிக்கை துறையாக செயல்படும். இது, அவசரகாலத்தில் இருந்த மிகவும் ஆபத்தான நிலையை நினைவுகூர்கிறது. இன்னும் சொல்லப்போனால் அப்போதிருந்ததை விட மிகவும் மோசமானதாகும்.
இந்தத் திருத்தங்கள் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றுமொரு அடக்குமுறை என்றே தில்லி பத்திரிகையாளர் சங்கம் கருதுகிறது. இந்தத் திருத்தங்கள் உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று அது கோருகிறது. போலி செய்திகள் அச்சுறுத்தல் (on the menace of fake news)குறித்து அனைத்து ஊடகங்களுடனும் கலந்தாலோசனை செய்திட வேண்டும் என்றும் அது கோருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ந.நி.)