மக்களவையில் சபாநாயகரிடம் வழங்கப்பட்ட மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது ஆகஸ்ட் 8,9 ஆகிய தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதால், மக்களவையில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி, காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய் மற்றும் பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் நாகேஸ்வர ராவ் ஆகிய இருவரும், மோடி அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி ஆதரவு தெரிவித்திருந்தது. இத்தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டு, விவாதம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த நிலையில், மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது ஆகஸ்ட் 8,9 ஆகிய தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமர் மோடி பதிலளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.