மதுரை, ஜூலை 25 - தமிழகத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த தருண்மோகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி. புகழேந்தி முன்பு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், “தேர்வு முகமையினர் கைரேகை பதிவு, தேர்வுமையம், தொலைபேசி எண்கள் தொடர்பான விவரங்கள் கடந்த 22-ம் தேதி வழங்கப்பட்டது. ஆனால், இன்னமும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விசாரணை விரிவடைந்துள்ளது. இதில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டவர் குறித்து விவரங்கள் கிடைத்துள்ளது. தேர்வு முகமை தரப்பில் மாணவர்களின் விண்ணப்பங்கள் கொடுக்கப்படும் பட்சத்தில் முறைகேடு உறுதி செய்யப்படும். எனவே, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற நேரிடும்” என்றதுடன், அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.