india

img

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஏப்ரல் 2 அன்று அனைத்துக் கிளைகளிலும் கண்டனம் முழங்குவீர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

புதுதில்லி, மார்ச் 27- கடந்த ஆறு நாட்களில் மட்டும் ஐந்து தடவைகள் பெட்ரோல்-டீசல் உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, நாடு முழுதும் வரும் ஏப்ரல் 2 அன்று அனைத்துக் கிளைகளிலும் கண்டன முழக்கம் மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் புதுதில்லியில் மார்ச் 25-26 தேதிகளில் நடைபெற்றது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.

கடந்த ஆறு நாட்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் ஐந்து தடவைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு லிட்டருக்கும் இப்போது கூடுதலாக 3 ரூபாய் 75 காசுகள் கொடுத்திட வேண்டும். இத்துடன், சமையல் எரிவாயு மற்றும் இதரப் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் ஏற்கனவே பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்துகொண்டிருப்பதாலும், வேலையின்மையாலும், வறுமையாலும், பசி-பட்டினிக் கொடுமையாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது இவை  மேலும் சொல்லொண்ணா சுமைகளை ஏற்றிடும்.

மோடி அரசாங்கம், மத்திய வருவாய்களை உயர்த்துவதற்காக பெட்ரோலியப் பொருட்களின் மீது மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தியுள்ள செஸ்/சர்சார்ஜ் வரிகளை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்றும் அதன் மூலம் இவற்றின் விலைகளைக் குறைத்து, மக்களுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கோருகிறது.

இவ்வாறு தாங்கமுடியாத அளவிற்கு விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிராக வரும் ஏப்ரல் 2 அன்று கிளர்ச்சிப் போராட்டங்களை மேற்கொள்ளுமாறு அனைத்துக் கிளைகளுக்கும் மத்தியக் குழு அறைகூவல் விடுக்கிறது.

காஷ்மீர் கோப்புகள்: திரைப்படம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1990களிலிருந்தே காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதத்தின் கொலைபாதகத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்து வந்திருக்கிறது. 1989 டிசம்பரில் முதன்முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி, தீவிரவாதிகளின் கொலைபாதகத் தாக்குதலை எதிர்கொண்டவர்களில் ஒருவர். காஷ்மீர் பண்டிட்டுகளின் அவலநிலைக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் அதே சமயத்தில், கடந்த காலங்களில் அவர்களின் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்திருந்தது.

எனினும், இப்போது வெளியிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் காட்டப்படும் வேதனையான சம்பவங்கள், மதவெறித் தீயை விசிறிவிடும் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு மற்றும் வன்முறையை வளர்ப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவே இட்டுச்செல்லும். இது, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மற்றும் மக்களின் நலன்களுக்கானது அல்ல. இது, ஏற்கனவே கூர்மைப்படுத்தப்பட்டுள்ள மதவெறிப் பிளவை மேலும் கூர்மைப்படுத்தி, நிலைமைகளை மேலும் சீர்கேடடைய வைத்திடும்.

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றுபட்ட அனைத்து இந்தியர்களாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய போராட்டம் என்று மத்தியக்குழு மீளவும் வலியுறுத்திக் கூறுகிறது. தீவிரவாத சக்திகளின் அட்டூழியங்களுக்கு அனைத்து சமூகத்தினரும் ஆளாகி இருக்கிறார்கள். இப்போது தேவை, தீவிரவாத வன்முறைக்கு எதிரான போராட்டத்தை ஒன்றுபடுத்திட வேண்டு என்பதே தவிர, அதனை பிளவுபடுத்துவது என்பது கிடையாது.

மேற்கு வங்கம்: தனியார் நிலக்கரிச் சுரங்க முன்மொழிவை ரத்து செய்

மேற்கு வங்கம், பிர்பூம் மாவட்டத்தின் தியோசா பச்சமை என்னுமிடத்தில், திரிணாமுல் காங்கிரஸ் மாநில அரசாங்கம் அங்கு வசித்துவரும் ஏராளமான பழங்குடியின மக்களையும் மற்றவர்களையும் அங்கேயிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அங்கே திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. முன்பு, இது தொடர்பாக அறிக்கை அளித்த கோல் இந்தியா நிறுவனம், இந்த இடத்தில் இவ்வாறு நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது சாத்தியமற்றது என்று கூறியிருந்தது. மேலும் இதனால் வேலைவாய்ப்போ அல்லது அந்தப்பகுதிக்கு ஒட்டுமொத்தமான வளர்ச்சியோ ஏற்படாது. மாறாக, அந்த இடத்தின் சுற்றுப்புறச்சூழலையும், வாழ்விடங்களையும் அது நாசமாக்கிடும். அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக விரிவான அளவில் ஒன்றுபட்ட இயக்கம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் கோரி இருக்கின்றன.   

பிர்பும் பகுதியில் நடைபெற்றுள்ள கொடூரமான கொலைகளுக்குக் கண்டனம்

இங்கே செயல்பட்டுவந்த கள்ளத்தனமான மணல் கொள்ளையர்கள் மற்றும் பல்வேறு கள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கயவர் கூட்டத்தினருக்கும் இடையே இருந்துவந்த கள்ளப் பிணைப்பு, உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ்காரர்களுக்கும் போலீஸ் நிர்வாகத்திற்கும் இடையே இருந்துவந்த பிணைப்பை ஒருங்கிணைத்திருந்தன. இப்பகுதியிலிருந்த ராம்புரா பகுதியில் போக்டுய் கிராமத்தில் கூரைவீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதன் காரணமாக அங்கே வசித்துவந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் ஒருவரின் மரணமும் அதற்குப் பழிவாங்கும் விதத்தில் நடந்துள்ள இந்தக் கொடூரமான சம்பவமும் இங்கே திரிணாமுல் காங்கிரசுக்கும் போலீசுக்கும் இடையே இருந்துவந்த ஆழமான பிணைப்பினை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.  

அணீஸ்கான் கொலை: விரைந்து நீதி வழங்குக

ஹவுரா மாவட்டத்தில் அம்டா வட்டாரத்தில் சாரதா கிராமத்தில் காவல்துறையினரால் அலியா பல்கலைக் கழகத்தில் படித்துவந்த மாணவர் தலைவர் அணீஸ்கான் கொல்லப்பட்டதற்கு, மத்தியக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இந்தச் சம்பவத்திற்குக் காரணமான கிரிமினல்கள் விரைந்து கைது செய்யப்பட்டு, கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மத்தியக்குழு கோருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு

மத்தியக்குழு, கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பரிசீலனைக்காக வெளியிடப்படவுள்ள வரைவு அரசியல்-ஸ்தாபன அறிக்கையை, நிறைவேற்றியது. இது 2022 ஏப்ரல் 6-10 தேதிகளில் கண்ணூரில் நடைபெறவுள்ள மாநாட்டில் தாக்கல் செய்யப்படும்.

(தமிழில்:ச.வீரமணி)