இந்தியா ஸ்டெம் (STEM) அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட, உலக ரோபோ ஒலிம்பியாட் (WRO)என்ற அமைப்பின் சார்பாக பசுமை நகரம் என்ற நோக்கத்தில் காற்று மாசுகளை குறைக்கும் வகையில் நடத்தப்பட்ட உலக ரோபோ ஒலிம்பியாட் - 2024 (தெற்கு) ஜூலை - 29, 30 தேதிகளில் சென்னை பொன்னேரி, வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளியில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை மற்றும் “ஹச்சிஎல்” பவுண்டேஷன் மூலம் ரோபோடிக்ஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மதுரை மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்கள் தத்தனேரி திரு. வி. க மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் எம். ஸ்ரீகுமரன், பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி ரூபிகா, வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாதனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இவர்கள் ஜூனியர் நிலையில் கலந்து கொண்டனர்.இவர்களை அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் ஸ்டெம் அறக்கட்டளையின் பயிற்சியாளர் கௌசல்யா பயிற்சிகளை மேற்கொண்டு அவர்களை வழிநடத்தி சென்றார்.
இலவசப் பயிற்சி
தொடர்ந்து பயிற்சியாளர் கௌசல்யா கூறுகையில் , மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இது போன்ற பயிற்சிகளை எங்களுடைய அறக்கட்டளை சார்பில் கொடுத்து வருகின்றோம். இது போன்ற பயிற்சிகளுக்கு தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும் நிலையில், இதை நாங்கள் இலவசமாகவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அளித்து வருகின்றோம்.
தொடர்ந்து பள்ளிகளில் இது போன்ற போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு பயிற்சிகளை அளித்து அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களை, மாவட்ட அளவில் தேர்வு செய்து, அதில் தேர்வாகும் மாணவர்களை மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்க வைத்து, அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றோம்.
இது அவர்களுடைய கல்வித் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தொடர்ந்து உயர்கல்வியிலும் அவர்கள் சாதனை புரிவதற்கு பெரும் உதவியாக இருக்கின்றது. தற்போது மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து தேர்வான மூன்று மாணவர்களும் நல்ல புரிதலோடு ரோபோக்களை வடிவமைத்து அதை செயல்படுத்திக் காட்டினார்கள் என்றார்.
அரசுப் பள்ளிகளுக்கு பெருமை
மாணவர்கள் கூறுகையில், அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை மற்றும் “ஹச்சிஎல்” பவுண்டேஷன் முயற்சியில் இது போன்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டோம். அதன்பின் பள்ளிகளில் நடைபெறும் சில போட்டிகளில் இது போன்ற சிறிய அளவிலான ரோபோக்கள் செய்து காட்டிய போது பள்ளி நிர்வாகம் எங்களை அடுத்த கட்ட போட்டிகளுக்கு தேர்வு செய்து உற்சாகப்படுத்தியது. அது மேலும் எங்களை பயிற்சிகளை மேற்கொள்ள பெரும் உதவியாக இருந்தது. எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மேலும் எங்களுக்கான பயிற்சிக்கான உதவிகளைஅமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை மற்றும் “ஹச்சிஎல்” பவுண்டேஷன் செய்து கொடுத்தன.போட்டியில் கலந்து உற்சாகப்படுத்தினார்கள். இன்றைக்கு நாங்கள் தேசிய அளவில் செய்து காட்டுவது என்பது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கின்றது. அகில இந்திய அளவில் 600 மாணவர்கள் தேர்வில் தமிழகத்திலிருந்து மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 3 பேர் தேர்வாகியுள்ளோம் என்ற போது, இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரும் வெற்றி மற்றும் பெருமையாக கருதுகிறோம் என்றார்கள்.