புதுதில்லி, ஆக.1-
பாலஸ்தீனர்களை, இஸ்ரேல் இனப் படுகொலை செய்வதற்கு எதிராக ஆகஸ்ட் 3 அன்று போராடுவதற்கு இடதுசாரிக்கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் - லிபரேசன்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் புதனன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐ.நா.தீர்மானங்களையும், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்வறிக்கைகளையும் வெட்கக்கேடான முறையில் மீறி இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக காசா பகுதியில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதற்கு எதிராக, பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும், அமெரிக்காவின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலை அட்டூழியங்களைக் கண்டித்தும் குரல் எழுப்புமாறு நாட்டு மக்களுக்கு இந்தியாவில் இயங்கும் இடதுசாரிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) ஆகிய கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இடதுசாரிக் கட்சிகளின் கோரிக்கைகள் வருமாறு:
· உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும். கிழக்கு ஜெருசலத்தைத் தலைநகராகக் கொண்டு 1947க்கு முன்பிருந்த எல்லையுடன் பாலஸ்தீன நாடு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
· இஸ்ரேல் மீது உடனடியாக ராணுவத்தடை விதித்திடு. ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதியோ இறக்குமதியோ செய்யக்கூடாது. அனைத்துவிதமான ராணுவ ஒத்துழைப்பையும் நிறுத்திடு.
· இந்தியத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு தொழில்துறை நடவடிக்கைகளுக்காக அனுப்புவதை உடனடியாக நிறுத்திடு.
· இராஜதந்திர நிதி மற்றும் பொருளாதாரத் தடைகள் உட்பட இஸ்ரேல் மீது சட்டரீதியான தடைகளை விதித்திடு.
· நிறவெறிக்கு எதிராக ஐ.நா.வின் சிறப்புக் குழுவை அழைத்து இஸ்ரேலின் நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வா. இவ்வாறு குற்றம்புரிந்த கயவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்று. இந்திய அரசே
! · இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கு உரிமங்களும், அனுமதிகளும் அளித்திருப்பதை ரத்து செய். · இஸ்ரேலிடமிருந்து ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதை நிறுத்து. ·
காலனித்துவ நிறவெறிக் கொள்கைகளின் அடிப்படையில் இஸ்ரேலின் சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலைகளுக்கு உடந்தையாக இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்திடு.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப, இந்திய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் ராஜதந்திர எதிர்ப்பை உறுதி செய்திடுமாறு இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன. வரும் ஆகஸ்ட் 3 அன்று இந்திய மக்களை கூட்டாகவும், சுயேச்சையாகவும் அணிதிரட்டிட வேண்டும் என்று அனைத்துக் கட்சிப் பிரிவுகளையும் இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்து கின்றன. இவ்வாறு இடதுசாரிக் கட்சிகளின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. (ந.நி.)