ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து 4,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமான சேவையில் துடிப்பு மிக்க இளைஞர்களை பணியமர்த்துவதன் மூலம் புதிய ஆற்றலை புகுத்த முடிவு செய்து ஏர் இந்தியா நிறுவனம் விருப்பு ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, கடந்த மாதம் 1 ஆம் தேதி விருப்பு ஓய்வு திட்டத்தை டாடா குழுமம் அறிமுகப்படுத்தியது.
ஏர் இந்தியாவில் நிரந்தர ஊழியர்கள் விருப்ப ஓய்வை தேர்ந்தெடுப்பதற்கான வயது வரம்பு 55லிருந்து 40ஆக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களும் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். விஆர்எஸ் திட்டத்தை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் எனவும் நிறுவனத்தின் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது ஏர் இந்தியாவில் 4,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 5,000 ஏர் இந்தியா ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாக உள்ளது.