புதுதில்லி, பிப்.2- பிப்ரவரியில் முன்னறிவிக்கப்பட்ட இயல்பை விட அதிகமான வெப்பநிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகமான வெப்பம் காரணமாக கோதுமை விவசாயம் பாதிக்கப்படலாம். கோதுமை பொதுவாக இலையுதிர் காலத்தில் அல்லது வசந்த காலத்தில் விதைக்கப்படுகின்றது.
இது காலநிலை மற்றும் வளரும் நிலைமைகளைப் பொறுத்தது. கோதுமையின் வளர்ச்சி வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி உள்ளிட்ட பல காரணிகளைச் சார்ந்தது. இந்த நிலைமைகள் சாதகமாக இருந்தால், கோதுமைப் பயிர்கள் தொடர்ந்து வளர்ந்து முதிர்ச்சியடையும். சுமார் 100 நாட்களுக்குப் பிறகு, கோதுமை மணிகள் உருவாகத் தொடங்கும்,
கோதுமை பயிர் பூக்கும் பருவத்தில் பயிர் செழிப்பாக வளர்வதற்கு சாதாரணமாக குளிர்ச்சியான சூழல் தேவை. பிப்ரவரி மாதத்தில் கிழக்கு உத்தரப்பிரதேசம், மேற்கு உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற கோதுமை விளையும் பகுதிகளில் மழை இயல்பை விட அதிகமாக இருக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கோதுமை அதிகமாக விளையும் முக்கிய மாநிலங்களில் 40-50 கிலோமீட்டர் வேகக் காற்றுடன் கூடிய மழை பரவலாக பெய்தால், கோதுமை வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். காற்றுடன் மழை பெய்தால் கோதுமைப் பயிர் மணிகளுடன் சாய்ந்துவிடும்
. சாய்ந்த பயிர்களை மீட்பது மிகவும் கடினம். பஞ்சாபின் சாங்ரூர் மாவட்டம் கெஹ்லான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குர்மெயில் சிங் கூறுகையில், 2021-ஆம் ஆண்டில் 30 ஏக்கரில் கோதுமை பயிரிட்டிருந்தேன். ஒரு ஏக்கருக்கு சராசரியாக 24-25 குவிண்டால் கோதுமை மகசூல் கிடைத்தது. 2022-ஆம் ஆண்டு அதிக வெப்பம் காரணமாக மகசூல் ஏக்கருக்கு 16-18 குவிண்டாலாகக் குறைந்தது. 2023-ஆம் ஆண்டு அதிக மழை பெய்ததால் 10 ஏக்கரில் 100 சதவீதம் தண்ணீர் தேங்கியது.
எட்டு ஏக்கரில் 45 சதவீதம் தண்ணீர் தேங்கியதால் நஷ்டத்தைச் சந்தித்தேன் என்றார். ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள இந்திய கோதுமை மற்றும் பார்லி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் இந்து சர்மா கூறுகையில், கடந்தாண்டு (2023) பிப்ரவரியில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை இருந்தது. இதனால், கோதுமை விளைச்சால் பாதிக்கப்பட்டது. மழை கடுமையாக இருந்தாலும் கோதுமை மணிகளுடன் வயல்களில் சாய்ந்து விடும். இவற்றை மீட்டெடுப்பது கடினம் என்கிறார்.
அதிக வெப்பம்
வடமேற்கு இந்தியா, மேற்கு மத்திய இந்தியா, வடகிழக்கு இந்தியா மற்றும் கிழக்கு மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் மாதாந்திர அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோதுமை அறுவடையில் மூன்று கட்டங்கள் உள்ளன, அவை விதைப்புப் பருவம், பூக்கும் பருவம். முதிர்ச்சியடையும் பருவம். இதில் எந்த ஒரு கட்டத்திலும் அதிக வெப்பநிலை இருந்தால் கோதுமை விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும். எதிர்பார்க்கும் தரம் இருக்காது.
இந்திய விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த 2016-ஆம் ஆண்டு அறிக்கையின்படி 2.5 டிகிரி செல்சியஸ் முதல் 4.9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்தால் அரிசி விளைச்சல் 32-40 சதவீதம் குறையும். கோதுமை விளைச்சல் 41-52 சதவீதம் குறையும்.