தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை நாளைக்குள் (மார்ச் 12) தாக்கல் செய்ய எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் எதிராக ஏ.டி.ஆர் அமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் தேர்தல் பத்திர நடைமுறை சட்டவிரோதமானது; அதனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தேர்தல் பத்திரங்களை விற்பதை உடனடியாக நிறுத்தவும், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களையும், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும், எஸ்.பி.ஐ வங்கிக்கும், எஸ்.பி.ஐ வங்கி அளிக்கும் விவரங்களை மார்ச் 13-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ கடந்த மார்ச் 4-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "26 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்; எஸ்.பி.ஐ-யால் செய்ய முடியாத வேலையை ஏதும் நாங்கள் கொடுக்கவில்லை; ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வேலையை செய்ய அவகாசம் கேட்பது ஏன்? நாட்டிலேயே பெரிய வங்கியான எஸ்.பி.ஐயால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா?" என எஸ்.பி.ஐ-யிடம் சரமாரியாக கேள்வு எழுப்பியது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்தில் தயாராக உள்ள நிலையில், உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், அவ்விவரங்களை நாளைக்குள் (மார்ச் 12) தாக்கல் செய்ய எஸ்.பி.ஐக்கும், மார்ச் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை நாளைக்குள் அளிக்கவில்லை என்றால் வேண்டுமென்றே உத்தரவை செயல்படுத்த மறுப்பதாக கருதி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என எஸ்.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்தது.