india

img

செய்தித்தாள் மீதான சுங்கவரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.... இந்திய பத்திரிகைகள் சங்கம் வலியுறுத்தல்...

மும்பை:
செய்தித்தாள், அச்சுக்காகிதங்கள் மீது விதிக்கப்படும் ஐந்து சதவீத சுங்க வரியை அரசு ரத்து செய்ய வேண்டும். அரசின் விளம்பரங்களுக்கான கட்டணத்தை ஐம்பது சதவீதம் உயா்த்த வேண்டும். அரசு விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய பத்திரிகைகள் சங்க பொதுச் செயலாளர் மேரி பால் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கொரோனா தொற்று காரணமாக எதிர்பாராத விதத்தில் பல்வேறு பாதிப்புகளை பத்திரிகைத் துறை எதிர்கொண்டுள்ளது. பொது முடக்கத்தால் விளம்பரங்கள் குறைந்தன. விநியோகமும் குறைந்தது. இதன் காரணமாக பத்திரிகை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் ஒரு சில பதிப்புகளை காலவரையின்றி நிறுத்திக் கொண்டன. சில நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு விட்டன. கடந்த எட்டு மாதங்களில் பத்திரிகை நிறுவனங்கள் சுமார் ரூ.12,500 கோடி இழப்பை சந்தித்துள்ளன. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தம் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்துறையில் ஈடுபட்டுள்ள 30 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். பத்திரிகைத் துறையைச் சார்ந்து இயங்கும் தொழிலகங்கள், அச்சகங்கள் உள்ளிட்டவையும் பாதிப்பை எதிர் கொள்கின்றன.

இக்கட்டான சூழ்நிலையிலும் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பு வதற்கான நடவடிக்கைகளை பத்திரிகை துறை மேற்கொண்டு வருகிறது. எனவே இத்துறைக்கான சிறப்புச் சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். செய்தித்தாள், அச்சுக்காகிதங்கள் மீது விதிக்கப்படும் ஐந்து சதவீத சுங்க வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்.பத்திரிகைத் துறைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசின் விளம்பரங்களுக்கான கட்டணத்தை ஐம்பது சதவீதம் உயா்த்த வேண்டும்.பத்திரிகைத் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டை 200 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அரசு விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கோரிக்கைகள் அனைத்தும் அவசரத் தேவையாக இருப்பதால், அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஐ.என்.எஸ் தலைவரும் தினமலர் நிர்வாகியுமான ஆதிமூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகைதுறையை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புசலுகைகளை அரசு அறிவிக்க வேண்டுமென  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

;