புதுதில்லி:
மத்திய அரசின் நிதி குறைப்பு காரணமாக 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டியல் சாதி (எஸ்.சி) மாணவர்களின் கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய போஸ்ட்மெட்ரிக் உதவித்தொகை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளை முடிக்க வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் செலவில் 90 சதவிகிதத்தை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. பெரும்பாலான மாநிலங்கள் இதை ஏற்கவில்லை. 12 ஆவது நிதி ஆணையம் 60 சதவீத பொறுப்பை மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. இருப்பினும், 2017–2018 ஆம் ஆண்டில், நிதி அமைச்சகத்தின் புதிய கொள்கையில் ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இந்த விவாதத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்தியது. மத்திய உதவி கிடைக்காததால் 2017 முதல் 2020 வரை 14 மாநிலங்களில் உதவித்தொகை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.மாநிலங்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளைத் தொடர்ந்து, பழைய 60:40 விகிதத்தைப் பகிர்ந்து கொள்ள மத்திய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்த விவகாரம் ஒரு வருடத்திற்கும் மேலாக மத்திய அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது.பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோ ருக்கு கல்வி கற்பிக்கக் கூடாது என்கிற பாஜக, ஆர்எஸ்எஸ் கருத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.