india

img

சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை தொடரும்... திட்டத்தை செயல்படுத்தத் தடையில்லை-அரசாணை ரத்து... உச்சநீதிமன்றம் தீர்ப்பு....

புதுதில்லி:
சென்னை - சேலம் இடையேயான 8 வழிச் சாலைத்திட்டத்தை செயல்படுத்த தடையில்லை என்றும் 8 வழிச் சாலைக்காக நிலத்தைக் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.நிலங்களை கையகப்படுத்த தடை தொடரும் என்றும்  உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜ்னா என்ற சாலை போக்குவரத்து திட்டத்தின்கீழ், சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இந்த திட்டத்திற்காகச் சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. விவசாய நிலங்களும் அளவிடப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து விவசாயிகள் மற்றும் விவசாய
அமைப்புகள் போராடின. 

இத்திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 2020 ஏப்ரல் 8 அன்று அளித்த தீர்ப்பில், தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களில் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய தேசியநெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் இறுதி  விசாரணை கடந்த அக்டோபரில் நடைபெற்ற போது, 8 வழிச் சாலைக்கு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டதா? சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், சென்னை-சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்தியஅரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால்நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சூழல் அனுமதியை கோர முடியும். 2006 ஆம்ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சூழல் முன்அனுமதி தேவையில்லை என்று கூறினார்.
சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் பதிவு செய்துள்ளது. இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம்தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது சரி என்று எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்தநீதிபதிகள், இந்த மேல்முறையீடு தொடர்பாகஎழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர்மனு தாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் டிசம்பர் 8 செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு அளித்ததீர்ப்பில், 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த உயர் நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும். 8 வழிச் சாலைக்காக நிலத்தைக் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. கையகப்படுத்திய விளைநிலங்களை விவசாயிகளிடம் திருப்பி வழங்கவேண்டும். சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்தத் தடையில்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த புதிய அரசாணையை வெளியிட்டு, உரிய துறைகளில் அனுமதி பெற்று, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 8 வழிச்சாலை திட்டத்தை புதிதாகத் தொடங்கலாம். சுற்றுச்சூழல் அனுமதியும் கட்டாயம் பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, நில உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். முறைப்படியான அறிவிக்கைகள் வெளியாகும் முன்பே விவசாயிகள்நிலங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்பெயரில் நிலத்தின் உரிமை மாற்றம் நடந்திருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பகுதி மட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஏற்கப்பட்டுள்ளது.

;