மதியாதார் வீட்டிற்குச் செல்லாதே-நீயும்
மதித்துஅவர் வீட்டில் உண்ணாதே!
மதிப்போரை மதித்துநீ வாழ்ந்திடு!-அவர்
மனதை அன்பாலே வென்றிடு!
பொறாமை ஆசை கோபம்-வாழ்வில்
போற்றாத செயலே அறமாம்!
அறவே தீச்சொல் நீக்கிடு-அதை
அண்டாமல் நாவைக் காத்திடு!
செய்வதற்கு அரியசெயல் செய்தால் -உன்னை
சிறப்புடன் பெரியரெனப் புகழ்வார்!
செய்வதற்கு எளியசெயல் கூட!-நீ
செய்யாமல் இருப்பின் இகழ்வார்!
நட்பினை ஆராய்ந்து கொண்டிடு!-அவர்
நலிவிலும் உயர்விலும் சேர்ந்திடு!
நட்பினைத் தேர்ந்ததன் பின்னே-அவரை
நம்பாமல் இருப்பது வீணே!
பலவகை அறங்களைச் சொல்லும்-குறள்
படித்திட உன்வாழ்க்கை வெல்லும்!
நலந்தரும் சொல்செயல் கொண்டே-நீ
நானிலம் வாழ்வது நன்றே!