எளிய மக்களின் பிரதிநிதிகளை பாஜக ஒடுக்க முயல்கிறது!
நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து, அமலாக்கத்துறை இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் டுவிட்டரில், பாஜக-வின் பெயரைக் குறிப்பிடாமல் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைத் தடுப்பதே, என்னைத் துன்புறுத்துவதற்கான முயற்சியின் பின்னணியில் உள்ள விஷயமாகும். நிலப்பிரபுத்துவ மக்கள் வெற்றிபெற மக்களை சுரண்டினார்கள். நம் முன்னோர்கள் (பழங்குடியினர்) இழக்க கற்றுக்கொடுக்கவில்லை. போராடி வெற்றிபெறக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கெலாட் பேசியது உண்மையில் மோடிக்கு அவமானம்!
அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருக்கிறார் என்று மற்றொரு காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்னரிடே பதிலளித்துள்ளார். “அந்த விழாவில் மோடிஜிக்கு அசோக் கெலாட் ஒரு கண்ணா டியை காட்டினார் என்றே நான் நினைக்கிறேன். அதாவது, உங்களுக்கு கிடைக்கும் மரியாதை உங்களுக்காக இல்லை என்பதை தனக்கு அருகில் அமர்ந்திருந்த மோடிக்கு அவர் நினைவு படுத்தினார். உங்கள் மரியாதை காந்திஜியின் நாடு, நேருஜியின் நாடு, அம்பேத்கர்ஜியின் நாடு மற்றும் ஜனநாயகம் வலுவாக உள்ள நாட்டின் பிரதமர் என்பதற்காக வந்தது என்று கூறினார். இது உண்மையில் மோடிக்கு அவமானகரமான விஷயமே ஆகும். இதில் மரியாதை எங்கே இருக்கிறது” என்று ஷ்னரிடே கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக பள்ளிகளில் தினமும் தியான வகுப்பு: அரசு உத்தரவு
“கர்நாடகப் பள்ளிகளில் மாணவர்களின் கவனம், ஆரோக்கியம், நேர்மறைச் சிந்தனை, ஆளுமைத்திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த, தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்ய அறிவுறுத்த வேண்டும்” என்றும், “அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கர்நாடகத்தின் சில பள்ளிகளில் தியான வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் இதை அமல்படுத்த வேண்டும் என மாநில தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை விடப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
யுஜிசி நெட் தேர்வின் டிசம்பர் 2021, ஜூன் 2022 தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் சனிக்கிழமையன்று (நவ.5) வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறி வித்துள்ளது. நெட் தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ள லாம். தேர்வர்கள், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். யுஜிசி நெட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும் என்பது குறிப் பிடத்தக்கது.