india

img

காலத்தை வென்றவர்கள் : கௌரி லங்கேஷ் நினைவு நாள்....

கௌரி லங்கேஷ் 1962ஆம் ஆண்டில் பிறந்தவர்.இவர் ஓர் இந்தியப் பெண் பத்திரிகையாளரும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவருடைய தந்தையார் பி. லங்கேஷ்ஒரு கன்னடக் கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவார். 

இவர் ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற கன்னட இதழின் முதன்மை ஆசிரியராகப் பணி புரிந்தார். ராணா அய்யூப் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’ நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார். முற்போக்குக் கொள்கையுடன் மதம், சாதி, இந்துத்துவா கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக எழுதி வந்தார். அதனால் பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. இவர் சாதிகளற்ற லிங்காயத் மதத்திற்கு ஆதரவாக நின்றார். ஏழை விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். தீவிரவாதிகளான நக்சல்பாரிகளை ஜனநாயக அரசியல் அரங்கில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார். அம்பேத்கர் மற்றும் பசவன்னா சென்ற நெறிகளில் தாமும் இயன்ற வரை செயல்பட்டார்.2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று பெங்களூருவில் அடையாளம் தெரியாத சில நபர்கள் இவரைச்சுட்டுக் கொன்றார்கள். இந்தக் கொலை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யுனெஸ்கோ அமைப்பு கௌரி லங்கேஷின் படுகொலையைக் கண்டித்தது. பேச்சுரிமையான அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் யுனெஸ்கோ கூறியது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பகுத்தறிவாளர் மருத்துவர் நரேந்திர தபோல்கர், கம்யூனிஸ்ட் கோவிந்த் பன்சாரே ஆகியோர் படுகொலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் தான் கௌரி லங்கேஷின் படுகொலையிலும் சம்பந்தப்பட்டிருந்தனர். இக்கூலிப் படையைஇயக்கியது இந்துத்துவா மதவெறி கும்பலே.

- பெரணமல்லூர் சேகரன்

;