india

img

கேரளாவில் உள்ள லட்சத்தீவு கல்வித்துறை அலுவலகத்தை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு.... வழக்கு தொடர்கிறார் லட்சத்தீவு எம்.பி.,...

கவரத்தி:
கேரள மாநிலம்  கொச்சியில் உள்ள லட்சத்தீவு கல்வித்துறை அலுவலகத்தை லட்சத்தீவிற்கு மாற்றும் முடிவுக்கு எதிர்ப்புஎழுந்துள்ளது. லட்சத்தீவு நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக லட்சத்தீவு எம்.பி., தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாகியாக பிரபுல் பட்டேல் என்பவரை ஒன்றிய பாஜக அரசு நியமனம் செய்தது முதல் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல சர்ச்சையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசியல் கட்சியினரும் லட்சத்தீவு மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். பிரபுல்பட்டேலை திரும்பப்பெறக்கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். 

இந்த நிலையில் லட்சத்தீவு நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பால் மேலும் சர்ச்சை எழுந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் லட்சத்தீவு நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வித்துறை அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது.  இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக ஏற்கனவே நிர்வாகத் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில், இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் லட்சத்தீவின் கவரத்தி அலுவலகத்திற்கு வருமாறும்   அலுவலகத்தில் உள்ள அனைத்து உபகரணங்களையும் கவரத்திக்கு கொண்டு வர வேண்டும் என்றும்  லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

லட்சத்தீவு நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் , இந்த உத்தரவால் கேரளாவில் பல்வேறு கல்விநிறுவனங்களில் படித்து வரும் லட்சத்தீவைச் சேர்ந்தசுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும்  இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.