பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டுவந்தது. அரசியல் சாசனத்தின் 103-வது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளின் விசாரணை முடிந்த நிலையில், தலைமை நீதிபதி யுயு லலித் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்றும், நீதிபதி யுயு லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் 10% இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கினர். இந்நிலையில், பெரும்பான்மையின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாக உள்ளது.