india

img

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளின் விடுதலை செல்லாது - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் அவரது 3-வயது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் கொலை வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண் கொடூரமாக கூட்டுப் பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது அவரது 3-வயது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேரை ஒரு கும்பல் கொலை செய்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதை அடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்தது குஜராத் பாஜக அரசு. குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, விடுதலையான குற்றவாளிகளுக்கு சிறை வாசலிலேயே மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு கொடுத்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து, 2022 ஆகஸ்ட் 25-ஆம் தேதி 11 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால் மற்றும் பேராசிரியர் ரூப் ரேகா வர்மா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதேபோல், குஜராத் அரசு குற்றவாளிகளை விடுவித்ததை எதிர்த்து கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். நீதிபதிகள் கே.எம்.ஜோசப், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்குகளை விசாரித்து வந்தது. நீதிபதி கே.எம்.ஜோசப் கடந்த ஆண்டு ஒய்வுப் பெற்ற நிலையில் நீதிபதி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில், ஒன்றிய மற்றும் குஜராத் அரசுகள் இவ்வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பை வழங்கப்பட்டது.
அதில், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லாது; வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும்; குஜராத் அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை; குற்றவாளிகள் 11 பேரும் இன்னும் 2 வாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சட்டத்தை பின்பற்றாமல் நீதியை நிலை நாட்ட முடியாது. நீதி என்பது குற்றவாளிகளின் உரிமைகளை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரும் சரணடைய உத்தரவு!
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் இன்னும் 2 வாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.
சட்டத்தை பின்பற்றாமல் நீதியை நிலை நாட்ட முடியாது. நீதி என்பது குற்றவாளிகளின் உரிமைகளை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இன்று காலை முதல் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையொட்டி தமிழ்நாட்டில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த சூழலில், இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளிலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.