புதுதில்லி, ஜன.11- ஆர்எஸ்எஸ் வார இதழ்களுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கொடூரமான விமர்சனங்கள், அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதையும் அப்பட்டமாக மீறும் விதத்தில் அமைந்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் அரசமைப்புச்சட்டத்திற்கு வெளிப்படையாகவும் அடாவடித்தனமாகவும் சவால் விடுத்துள்ளார். முஸ்லீம்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாங்கள் “மேலாதிக்கம்” (“supremacy”) உள்ளவர்கள் என்றும் கொண்டிருக்கும் சிந்தனைகளையும் கைவிட வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார். வரலாற்றுத் தவறுகள் என்ற பெயரில் “இந்து சமூகம்” ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், எனவே இந்துக்கள் “யுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்” என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு கூறியிருப்பதன்மூலம் உண்மையில் அவர், மதத்தின் அடிப்படையில், நாட்டின் குடிமக்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக (அதாவது முஸ்லீம்களுக்கு எதிராக) வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட அழைப்பு விடுத்திருக்கிறார்.
உண்மையில், இவர்கள் கூறுவது “இந்து சமூகம்” அல்ல. மாறாக இது, இந்துத்துவா அணியினரின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தாலும், மோகன் பகவத் போன்றவர்களால் பல்வேறு மட்டங்களிலும் சிறுபான்மையினருக்கு எதிராக அரசமைப்புச்சட்டம் மற்றும் சட்ட உரிமைகள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுக்கப்படுவதன் மூலமும் ஒருவிதமான முற்றுகை உணர்வை உருவாக்கியிருப்பதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகமேயாகும். இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் தாங்கள் இந்துக்களுக்குக் கீழானவர்கள் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் மதவெறி சித்தாந்தங்களை உருவாக்கிய ஹெக்டேவார் மற்றும் கோல்வால்கர் போன்றவர்களின் கூற்றுக்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும் என்கிற நச்சுக் கருத்தின் புதுப்பிக்கப்பட்ட கூற்றுகளேயாகும்.
இவர் உதிர்த்துள்ள கூற்றுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கடுமையாகக் கண்டிக்கிறது. இவ்வாறாக மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை அரசமைப்புச்சட்ட விழுமியங்கள் மீது இவர்களால் ஏவப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக நாட்டுப்பற்று கொண்ட பிரஜைகளும், சக்திகளும் ஒன்றுபட்டுக் குரல் எழுப்பிட வேண்டும் என்றும் அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(ந.நி.)