“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றும், பஞ்சாப்பில் உள்ள 13 மக்களவைத் தொகுதியிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தது. இதன்மூலம் உற்சாகமடைந்த பாஜக, பஞ்சாப்பில் இந்தியா கூட்டணி உடைந்து விட்டது என ஊடகங்கள் மூலம் டாப் டிரெண்டிங் செய்தியாக வெளியிட்டு, பழைய கூட்டாளியான சிரோமணி அகாலிதளத்தை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்து, பஞ்சாப்பில் ஆதிக்கம் செலுத்த கனவு கண்டது.
ஆனால் பாஜகவின் கனவு ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. விவசாய போராட்டம் காரணமாக பாஜகவுடன் கூட்டணி வைக்க சிரோமணி அகாலிதளம் தயங்கி வருவதாகவும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானதால் பாஜக அதிர்ச்சியில் உறைந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து பாஜக மீள்வதற்குள் ஆம் ஆத்மி அடுத்தகட்ட பவுன்சரை வீசியுள்ளது. அதில் பஞ்சாப்பில் தனித்து போட்டியிடும் முடிவு ஆம் ஆத்மி - காங்கிரஸ் என இருகட்சிகளும் இணைந்து எடுத்த முடிவுதான். இது பாஜகவை வீழ்த்த எடுத்த அரசியல் வியூகம் என அவர் கூறினார். இதனால் பஞ்சாப் அரசியல் களத்தில் பாஜகவிற்கு அடுத்தடுத்து இரட்டை அடி கிடைத்துள்ளது.