india

img

அதானி, மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க மோடி அரசு மறுப்பு 5-ஆவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

புதுதில்லி, டிச. 2 - அதானியின் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்,  மணிப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக தொடரும் வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து  வருகின்றன.

ஆனால், விவாதத்தை அனுமதிப்பதில்லை என்று மோடி அரசு பிடிவாதமாக உள்ளது. இதனால், கடந்த நவம்பர் 25 அன்று துவங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், இதுவரை அவை நடவடிக்கைகள் ஒருநாள் கூட முழுமையாக நடைபெறவில்லை. நான்கு நாட்களுமே முடங்கின.

இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், திங்களன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் கூடின. மக்களவையில் காலை 11 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கிய நிலையில், திறன் மேம்பாடு தொடர்பாக ஆந்திரப்பிரதேச எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதில் அளிக்க ஆரம்பித்தார். அப்போது, இன்றாவது அதானி, மணிப்பூர் விவகாரங்களை விவாதங்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால், நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை, அதன்பிறகு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே பிரச்சனைகள் எதிரொலித்தன. அப்போது, அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை என 20 பிரச்சனைகளில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் தன்னிடம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால், அவற்றை ஏற்க முடியாது என்று மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தடாலடியாக அறிவித்தார்.  இதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பவே, இங்கும் முதலில் நண்பகல் 12 மணி வரையும், அதன் பிறகு நாள் முழுவதும் அவை  ஒத்திவைக்கப்பட்டது. இதனால், திங்களன்று 5-ஆவது  நாளாகவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.