2023-ஆம் ஆண்டில், இந்தியாவில் நடந்த சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு சம்பவங்களில் 75% பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளதாக இந்தியா ஹேட் லேப் (India Hate lab) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்ட இந்தியா ஹெட் லேப் என்ற அமைப்பு கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் குறித்த ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் படி, இந்தியாவில் மொத்தம் 668 வெறுப்பு பேச்சு சம்பவங்கள் நடந்துள்ளதும், அதில் 75% (498) வெறுப்பு பேச்சு சம்பவங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வெறுப்பு பேச்சு சம்பவங்கள் 36%மும், ஹலால் ஜிகாத், லவ் ஜிகாத் போன்றவற்றை முன்வைத்து வெறுப்பு பேச்சு சம்பவங்கள் 63%மும், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் வகையிலான வெறுப்பு பேச்சு சம்பவங்கள் 25%மும் பதிவாகியுள்ளன.
இந்த வெறுப்பு பேச்சு சம்பவங்கள் குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வெறுப்பு பேச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அதே போல், இஸ்ரேல்-காசா போரை முன்வைத்து இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக 41 வெறுப்பு பேச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 118 வெறுப்பு பேச்சு சம்பவங்களும், உத்தரப் பிரதேசத்தில் 104 சம்பவங்களும், மத்தியப் பிரதேசத்தில் 65 சம்பவங்களும், ராஜஸ்தானில் 64 சம்பவங்களும், அரியானாவில் 48 சம்பவங்களும், உத்தரகண்ட்டில் 41 சம்பவங்களும், கர்நாடகாவில் 40 சம்பவங்களும், குஜராத்தில் 31 சம்பவங்களும், சத்தீஸ்கரில் 21 சம்பங்களும், பீகாரில் 18 வெறுப்பு பேச்சு சம்பவங்களும் நடந்துள்ளன.
விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், சங் பரிவார், கோ ரக்ஷா தளம் உள்ளிட்ட அமைப்புகள் வெறுப்பு பேச்சை அதிக அளவில் நிகழ்த்தியுள்ளன. தெலங்கானா மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ நிதிஷ் ராணா, ஏஹெச்பி தலைவர் பிரவீன், வலதுசாரி ஆதரவாளர் கஜல் சிங்காலா, சுரேஷ் ஷவாங்கே, யதி நரசிங்கானந்த், காளிசரண் மகாராஜ், சாத்வி சரஸ்வதி மிஸ்ரா ஆகிய 8 பேர் வெறுப்பை பரப்பும் வகையில் பேசுவதில் முதல் 8 இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.