india

img

வேளாண் சட்டங்கள் தொடர்பான அரசின் முன்மொழிவை ஏற்கமுடியாது... நாடு முழுவதும் போராட்டம் தொடரும்... விவசாய சங்கங்கள் அறிவிப்பு

புதுதில்லி:
வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசின் முன்மொழிவை ஏற்கமுடியாது என்றும், போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாகத் தொடரும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா உட்பட 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள்  மத்திய அரசின் சார்பில் அமைச்சரவைத் தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்த வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர் சோம் பார்கஷ் முதலானவர்களை டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமையன்று சந்தித்து, வேளாண் சட்டங்கள் மூன்றையும், மின்சார சட்டமுன்வடிவையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.  இந்த 32 சங்கத் தலைவர்களில் பஞ்சாப் சங்கங்களைச் சேர்ந்தவர்களும், அரியானாவிலிருந்து ஒருவரும், அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஹன்னன் முல்லாவும், ஆர்கேஎம்எஸ் சார்பில்ஒருவரும் பங்கேற்றனர். 

முடிவு எதுவும் எடுக்கப்படாமல் பேச்சுவார்த்தை  முடிவடைந்தது. டிசம்பர்3 வியாழனன்று  மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.மத்திய அரசின் தரப்பில் ஐந்து உறுப்பினர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அது விவசாயிகள் சங்கம் தெரிவித்திடும் ஆட்சேபணைகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்திடும் என்றும் அளித்திட்ட முன்மொழிவை விவசாய சங்கத் தலைவர்கள் நிராகரித்தனர். இத்தகைய குழுக்களால் எவ்வித விளைவும் ஏற்படாது என்பதே கடந்த கால அனுபவங்கள் என்று சங்கத் தலைவர்கள் அரசிடம் தெரிவித்துவிட்டனர்.அனைத்து சட்டங்கள் குறித்தும் ஆட்சேபணைகளை அளித்திடுமாறு மத்திய அரசு, சங்கத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அமைச்சர் கூறும்போது, வேளாண் சட்டங்களில் குறைபாடுகள் இருக்கலாம் என்றும், அவற்றைப் பரிசீலித்திட அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.பின்னர் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை விவசாயிகள் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்தது. 

நாடாளுமன்ற வீதியில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பேரணி 
மத்திய அரசு, விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி புதன்கிழமையன்று புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஹன்னன் முல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்- லிபரேசன்)யைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

போராடும் விவசாயிகளுடன் பீம் சேனை இணைந்தது
தில்லியில் போராடும் விவசாயிகளு டன் பீம் சேனை அமைப்பும் இணைந்து கொண்டது.இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் மக்கள் மற்றும் பீம்சேனை அமைப்பின்  தலைவரான சந்திரசேகர ஆசாத் கூறுகையில்,  பீம் சேனை அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களும், தில்லி-காசிபூர் எல்லையில் போராடும்விவசாயிகளுடன் செவ்வாய்க்கிழமை யன்று தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். இக்கடுங்குளிரிலும் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு எங்கள் முழு ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் போராட்டத்தில் நாங்களும் அவர்களுடன் இணைகிறோம் என்று தெரிவித்தார்.  (ந.நி.)

;