health-and-wellness

img

காய்ச்சல் கால உணவுகள்...

சார்.. சார் பிள்ளைக்கு காய்ச்சல்னு வெளியில டெஸ்ட் பாக்க சொன்னாங்க சார். என்ன காய்ச்சல்லனு கொஞ்சம் ரிப்போர்ட் பாத்துச் சொல்லுங்க சார்.
இத எதுக்குமா எடுத்த? யாரு எடுக்கச் சொன்னது?

இல்ல சார். இப்போ டெங்கு காய்ச்சல் பரவுறதால வெளியில இரத்த டெஸ்ட் எடுத்துப் பாத்துகிட்டா நல்லதுன்னு பக்கத்து வீட்டுல சொன்னாங்க சார். ஆனா, என்ன காய்ச்சல்னு கேட்டா இரத்த டெஸ்ட் பண்றவரு டாக்டருகிட்ட போய் கேட்டுக்கோங்கனு சொல்லி அனுப்பிட்டாரு, அதான் சார்.

அட, எதுக்கும்மா தேவையில்லாம இப்படி கொழந்தையையும் பாழாக்கிட்டு காசையும் வீணாக்குறீங்க. டெங்கு காய்ச்சலாவே இருந்தாலும் மூணாவது நாள் அஞ்சாவது நாளுக்கு அப்புறம்தானம்மா இரத்தத்துல அறிகுறியே தெரியும். டெஸ்ட் பண்றது காய்ச்சலை உறுதிபடுத்துறதுக்குதானே தவிர மத்தபடி எல்லோருக்கும் ஒரே வைத்தியம் தானம்மா பாக்கப் போறாங்க!

என்ன டாக்டர் சொல்லுறீங்க. அப்போ டெங்குக்குனு ஸ்பெஷல் வைத்தியம் இல்லையா?
வைரஸ் காய்ச்சலுக்கு மூணே வைத்தியம்தான். ஒன்னு, வைரஸ் காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சுருக்கிற தடுப்பூசியை போட்டுக்குறது. இரண்டாவது, சில வைரஸூக்கு கண்டுபுடிச்சிருக்கிற மாத்திரைங்க மூலமா குணப்படுத்துறது. மூணாவது காய்ச்சல் அறிகுறிக்குத் தக்கவும், பிரஷர், நாடித்துடிப்பு பரிசோதனைக்கு ஏத்த மாதிரியும் மாத்திரை மருந்துலாம் கொடுத்து காய்ச்சல் சரியாகுற நாள் வரைக்கும் தாக்குப் பிடிக்கிற ஒத்துழைப்பு வைத்தியம் பண்றது. பெரும்பாலும் மூணாவது வைத்தியம் தான் எல்லா வைரஸ் காய்ச்சலுக்கும் செய்யுறாங்க.
அப்போ எம் பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குறதுக்கு வைத்தியம் பாக்க மாட்டீங்களா சார். உடனே சரி பண்ணிட முடியாதா சார்?

கொஞ்சம் பொறுங்கம்மா.. (பரிசோதித்து முடித்த பின்) உங்க பையனுக்கு வந்திருக்கிறது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். ஒடம்பு 101 டிகிரி இருக்கிறதால கொஞ்சமா சோர்வா இருக்கான். நான் ஊசி போட்டுட்டு, மாத்திரை எழுதித் தரேன். பையனுக்கு நேரத்துக்கு மாத்திரையை கொடுத்துட்டு மூணு நாளைக்கு அப்புறமா கூப்பிட்டு வாங்க, சரியா.
சார், பேஷண்ட்தான் யாரும் இல்லையே. ஒரு சந்தேகம் கேட்டுக்கவா சார்.

ஆசுபத்திரிக்கு வந்தவுடனே காச்ச மாத்திரை கொடுங்க, ஊசி கட்டாயம் போடுங்கன்னு கேக்குற கூட்டத்துல சந்தேகம் கேக்கனும்னு ஆசைப்படுறியே, ரொம்ப சந்தோசம். என்ன விசயம்மா, கேளு.
சார், பையன் சும்மாவே சாப்பிட மாட்டான். இப்போ காய்ச்சல் வந்ததிலிருந்து எதுவுமே சரியா சாப்பிடவும் மாட்டேங்குறான். அதான் ஏதாவது அவனுக்கு புத்திமதி சொல்லி சாப்பிடச் சொல்லுங்க சார்.
ம்ம்.. பரவாயில்லை, சரியான கேள்வித்தான் கேட்டுருக்க. அது ஏன்னு கேளேன்.
அது ஏன் சார்?

ஆசுபத்திரி ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சு சரியா மதியம் ஒரு மணிக்கு முடிஞ்சுடும். தெனந்தெனம் நாலு மணி நேரத்துல சராசரியா இருநூறு பேருக்கு வைத்தியம் பாக்குறேன். இப்போ உன்கிட்ட இதுமாதிரி விளாவாரியா பேசனும்மா குறைஞ்சது கால் மணி நேரமாவது ஆகும். அப்படி ஒவ்வொருத்தருக்கும் கால் மணி நேரம் பாத்தா ஒரு நாளைக்கு சராசரியா இருபது பேருக்குத்தான் பாக்க முடியும்.
அதேசமயம் பேஷண்டும் வெயிட் பண்ண மாட்டாம சண்டை போட்டுகிட்டு இருப்பாங்க. அதனால காய்ச்சலுக்கு ஏதாவது நாலு வார்த்தை நல்லதா பேசி அட்வைஸ் பண்ணலாம்னு பாத்தாலும் முடியுறதில்லை. இப்போ பேஷண்ட் இல்லாததால என்னால கொஞ்சமாவது உன்கிட்ட பேச முடியும்னு நினைக்குறேன். சரி, நீ கேளும்மா.
அதுவும் சரிதான் சார், ஏதாவது கேட்கலாம்னு நாங்களும் நெனைச்சாலும், எவ்ளோ நேரமா பாத்துகிட்டு இருப்ப. சீக்கிரமா பாத்துட்டு போம்மா. நாங்களும் ஒடம்பு சரியில்லாமத்தான் வந்திருக்கோம்னு வரிசையில இருக்குறவுங்க மல்லுக்கு நிப்பாங்க.

அதாவது சார், எல்லா டாக்டரும் காய்ச்சல் வந்தா சுடு தண்ணியத்தான் குடிக்கனும்னு சொல்லுறாங்க. இவன் என்னடான்னா ஆறிப்போன பச்ச தண்ணியவே குடிச்சுகிட்டு இருக்குறான். அதுக்கு என்னதான் சார் செய்யுறது?

ஏம்மா, சுடு தண்ணின்னா சுடச்சுட குடிக்க கொடுக்குறியா என்ன? தண்ணில கிருமி இருந்தா அதை குடிக்கும்போது காய்ச்சல் இன்னும் அதிகமாயிடும்னுதான் அதை கொதிக்க வச்சு குடிக்கச் சொல்லுறாங்க. அதாவது தண்ணிய நல்லா கொதிக்கவிட்டு அடுப்புல இருந்து அப்படியே இறக்கி வச்சுடனும். தண்ணியோட சூடு குறையட்டுமேனு பச்சத் தண்ணியல்லாம் கலக்கக் கூடாது. அப்படி சுட வச்ச தண்ணி ஆறிப்போய் சாதாரணமா மாறின பின்னாடி அதை குடிச்சாலே போதுமானது.

சார், அப்புறம் குளுக்கோஸ் வேற குடுக்கச் சொல்லுறாங்களே. கடையில குளுக்கோஸ் இருபது ரூபா டப்பாவுல விக்குதே, அதை வாங்கியா சார் கொடுக்கனும்?
அட, குளுக்கோஸ் பொடின்னு ஆசுபத்திரில சொல்லுறது சக்கரையும் உப்பும் கலந்து பாக்கெட்டுல கொடுக்குறது. கடையில குளுக்கோஸ் மட்டும் ரெடிமேடா இருக்கும். அது வேலைக்கு ஆகாது. காய்ச்சல் வந்தா ஒடம்பு வறண்டுபோய் தண்ணிச் சத்த உறிஞ்சு எடுக்குற மாதிரி, வேர்வை வழியா உப்புச்சத்தும் வெளியேறிடும். அதனால தான் இந்த சக்கரை-உப்பு கரைசல் பவுடர் கொடுக்குறாங்க. 
ஒரு லிட்டர் தண்ணி பாட்டில்ல ஒரு பாக்கெட் கலந்து அதை ஒரு நாள் வரைக்கும் பயன்படுத்திட்டு மிஞ்சுனது எவ்ளோ தண்ணினாலும் அப்படியே அதை கீழ ஊத்திரனும். ஒருவேளை இந்த பாக்கெட் கிடைக்கலைனாகூட அவசரத்துக்கு ரெண்டு ஸ்பூன் சர்க்கரைக்கு ஒரு ஸ்பூன் உப்பை டம்ளருல போட்டுக் கலந்து குடிக்கச் சொல்லலாம்.
டாக்டர்! ஒரே தண்ணியும், உப்பத் தண்ணியுமா குடிக்கச் சொன்னா எப்படி சார்? வேற ஏதாவது சொல்லுங்க.
சரி, சாப்பாடு குக்கர்ல செய்வீங்களா, இல்ல சட்டி பானையிலதானா?

ஏன் சார், சிங்கம் பட சூர்யா மாதிரி இதெல்லாம் கேக்குறீங்க? சட்டிப் பானையிலதான் சமைப்போம். குக்கருக்கு நாங்க எங்க போக?

ம்ம்.. அப்ப சரி. சமைச்ச பிறகு கடைசியா வடிதண்ணி இருக்கும்ல அதுல கொஞ்சம் சோத்துப் பருக்கைய போட்டு குடிக்கக் குடுங்க. அதுலதும் நிறைய வைட்டமின் சத்தும், நீர் சத்தும் இருக்கு. அதே மாதிரி பருப்பு வேக வச்ச தண்ணி, கீரை வேக வச்ச தண்ணின்னு அதுல தேவையான உப்பு போட்டு குடிக்கக் கொடுக்கலாமே. அதுவும் நல்லதுதான்.

சார், பையன் மூணு வேளைக்கும் டீயா தான் குடிக்கிறான். கேட்டா அதுலயும் தண்ணிதான இருக்குன்னு எடக்கு முடக்கா பேசுறான். நாம சொல்லுறத கேட்கவே மாட்டேங்குறான் சார்.
இங்க பாரும்மா, ஒடம்பு சரியில்லைனா பாலும் பண்ணும் சாப்பிடுறது வெள்ளக்காரன் காலத்துல அவன் நோயாளியா ஆசுபத்திரில இருக்குறப்போ கொண்டு வந்த பழக்கம். பால், டீ, காப்பியில காய்ச்சலை குணப்படுத்துற எந்த சத்தும் இல்லை. அது சளித்தொல்லையை அதிகரிக்கத்தான் செய்யும். அப்படியும் குடிச்சே தீரனும்னு அடம்பிடிச்சா மூலிகை டீ மாதிரியா சுக்கு டீ, கொத்துமல்லி டீ, துளசி டீயா பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை போட்டு பால் இல்லாம குடிக்கக் கொடுக்கலாம்.

அப்புறம் உங்களுக்கு சூப் செய்ய தெரியும்னா பூசணி, கேரட் மாதிரி காய்கறி சூப், கீரை சூப் போட்டுக் கொடுக்கலாம். ஆனா சூப்புல காய்ச்சலோட வீரியத்தை குறைக்குறதுக்கு மிளகும், ஜீரண சக்திக்காக சீரகமும் கட்டாயம் சேர்த்துக்கணும்.

தொடர்ச்சி அடுத்த வாரம்

-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com