headlines

img

ஹவுஸ்டனில் மோடி-டிரம்ப் காட்சி -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

அமெரிக்காவில் ஹவுஸ்டனில் 50 ஆயிரம் இந்திய அமெரிக்கர்கள் கூடியிருந்த கூட்டத்தில் நரேந்திரமோடி நடந்தகொண்டவிதம், இந்திய - அமெரிக்க உறவுகளில் இந்தியா எந்த அளவிற்கு அமெரிக்காவின் அடிவருடியாக மாறியிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருந்ததை மீளவும் ஒருமுறைக் காணமுடிந்தது. அரங்க மேடையில் மோடியும் டிரம்பும் கூட்டாகக் காட்சியளித்த விதம், அமெரிக்காவில் விரைவில் நடைபெறவிருக்கும்  தேர்தலில் இந்திய அமெரிக்க வாக்காளர்களைக் கவர்வதற்கான ஒரு முயற்சியே தவிர வேறெதுவும் கிடையாது.

முதலாவதாக, இந்தியப் பிரதமர் மோடி, “இந்தத் தடவை டிரம்ப் சர்க்கார்” (‘Abki baar Trump Sarkar’) என்கிற கோஷத்தை திரும்பத் திரும்பக் கூறியதன் மூலம், அடுத்த ஜனாதிபதியாக டிரம்ப்தான் வரவேண்டும் என்பதை மோடி ஏற்றுக்கொண்டுவிட்டதைக் காட்டுகிறது. இதே கோஷம், சென்ற ஜனாதிபதி  தேர்தலின்போது டிரம்ப் உபயோகப்படுத்தியதுதான்.

நரேந்திர மோடியைக் குஷிப்படுத்தும் விதத்தில், டிரம்ப்பும், அவரை வானளாவப் புகழ்ந்து தள்ளினார். இதற்கு முக்கிய காரணம், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் பாரம்பர்யமாக ரிபப்ளிகன் கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடமாகும். ஆனால் இப்போது இங்கே டெமாக்ரடிக் கட்சிக்கு செல்வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. எனவே, எந்த அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்குத் தங்கள் கட்சிக்கு வாக்குகளைத்திரட்டிட வேண்டும் என்பதில் டிரம்ப் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்.

மோடியும் அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போன்ற அவரது ஆலோசகர்களும் இவ்வாறு டிரம்ப்பைக் குஷிப்படுத்துவதன் மூலம், காஷ்மீர் பிரச்சனையில் தங்களுக்கு எதிராக எதுவும் கூறாது டிரம்பின் வாயை அடைத்துவிடலாம் என்றும், இம்ரான்கானின் கெஞ்சுதல்களுக்கு இரையாகாமல் செய்துவிடலாம் என்றும் நம்பினார்கள். கூடுதலாக டிரம்ப்புடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ளலாம் எனவும் நம்பினார்கள். 

எனினும், டிரம்ப்பின் பக்கம் சாய்வதும், டிரம்ப்பை முகஸ்துதி செய்வதும் அபாயகரமான ஒன்றாகும்.  டெல்லுரியான் என்னும் அமெரிக்க இயற்கை வாயு நிறுவனத்துடன், இந்திய நிறுவனமான  பெட்ரோநெட் சுமார் 2.5 பில்லியன் டாலர் முதலீட்டுடன் ஒரு வர்த்தக ஒப்பந்த்த்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கான ஒரு மேம்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. எனினும் இதுதொடர்பான வர்த்தகப் பேரம் மிகவும் சுமுகமானதாக இருந்திட வேண்டும் என்று இந்தியா விரும்பியபோதிலும், இதுதொடர்பாக எவ்விதமான வர்த்தக ஒப்பந்தமும் நியூயார்க்கில் மோடியும் டிரம்ப்பும் சந்தித்துக்கொண்டு, அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தைகளை நடத்தியபோது, அறிவிக்கப்படவில்லை. இவர்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தியபோது வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உடனிருந்த போதிலும்கூட, பல்வேறு அம்சங்களில் அமெரிக்கா தன் நிலைப்பாடுகளைத் தளர்த்திக் கொள்ளவில்லை. இதன்காரணமாக இந்தியா, பல்வேறு வடிவங்களில் அமெரிக்கா கூடுதலாகக் கோரும் வரிகளைக் கட்டியாக வேண்டும். வர்த்தகப் பேரங்களில் அமெரிக்கா அதிகமான அளவிற்கு நம்மிடமிருந்து சலுகைகளை எதிர்பார்க்கிறது, மேலும் மிகப்பெரிய அளவில் இந்தியச் சந்தையைத் தங்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்றும் கோரியிருக்கிறது. இவை அனைத்துக்கும் எவ்வித ஆட்சேபணையுமின்றி இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது.

மோடி அரசாங்கம், ஆசியாவில் அமெரிக்காவின் போர்த்தந்திர நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துப்போகக்கூடிய விதத்தில், தன் விருப்பத்தினைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் அமைப்பு சார்பாக நடைபெற்ற இணை செயலாளர்கள் மட்டத்திலான கூட்டத்தின்போது, இந்நாடுகளின் மேம்படுத்தப்பட்ட அயல்துறை செயலாளர்கள் அளவிலான கூட்டத்தில் பங்கேற்கவும் இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது.   இப்படியெல்லாம் அமெரிக்காவுக்கு அடிபணிந்து  செல்வதன்மூலமாக அமெரிக்கா, பாகிஸ்தானுடன் வைத்திருக்கும் உறவுகளிலிருந்து அதனை வெட்டிவிடலாம் என்ற இந்தியாவின் நினைப்பு, பொய்த்துப் போய்விட்டது. ஏனெனில், ஜனாதிபதி டிரம்ப்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்து, மீண்டும் ஒருமுறை காஷ்மீர் பிரச்சனையில் இரு நாட்டின் தலைவர்களும் விரும்பினால் சமரசம் செய்து வைக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.  ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிற டிரம்ப்பின் குறிக்கோள் நிறைவேறும்வரை, பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு ஒரு தவிர்க்கமுடியாத கூட்டாளியாக இருப்பது தொடரும்.

நரேந்திர மோடி, ஹவுஸ்டனில் நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப்பிற்கு மிகவும் ஆடம்பரமான முறையில் ஆதரவினைத் தெரிவித்ததற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. இஸ்ரேலைச் சேர்ந்த பெஞ்சமின் நெத்தன்யாகு (Benjamin Netanyahu) போன்று, நரேந்திர மோடியும் டொனால்டு டிரம்ப்பின் ஒரு சித்தாந்தரீதியான ஆத்மார்த்த நண்பர்தான். இவர்கள் அனைவருமே  வலதுசாரி, தேசிய இனவெறிப் பண்பினைப் பெற்றிருப்பவர்கள்தான். ஓர் அடிமை, தன் ஆண்டைக்குக் காட்டும் விசுவாசத்தைப்போல மோடி, டிரம்பிற்குக் காட்டியிருப்பதிலிருந்து, நரேந்திர மோடி தன்னுடைய சொந்த படுபிற்போக்குத்தனமான உலகக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

(செப்டம்பர் 25, 2019)

(தமிழில்: ச. வீரமணி

;