headlines

img

வெங்காய விலை... யார் குற்றம்?

 இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கிலோ சின்னவெங்காயத் தின் விலை ரூ.110 முதல் 130 வரையும்,  பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 140 முதல் 160 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் 200 ரூபாய்க்கும் வெங்காயம் விற்கப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் சின்ன வெங்காயம் அதிக  அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய  மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படு கிறது. சுமார் 30,600 ஹெக்டர் அளவிற்கு, 3 லட்சம் டன் வெங்காயம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக ஏப்ரல், மே, ஜூன், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் வெங்காயம் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் தமிழகத்தில் வெங்காய உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது. மேலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காய பயிர்களும் அதிக ஈரப்பதம் காரணமாக நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிலை ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. அதை அரசு வேடிக்கை பார்க்கிறது. வெங்காய விலை உயர்வால், உற்பத்தியாள ரான விவசாயிகளும், பொதுமக்களும் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இருவருக்கும் இடையில் உள்ள வியாபாரிகள் தான் பலன் பெறுவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது அதன் உற்பத்தியாளர்களான விவசாயி கள் அல்ல; வியாபாரிகள் தான் விலையை உயர்த்தி லாபம் பார்க்கின்றனர். சென்ற ஆண்டும் கூட நல்ல விளைச்சல் இருந்தும், வெங்காய விவ சாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ‘நல்ல’ விலை இருந்தும், விளைச்சல் எடுக்க முடியவில்லை. இதில் பாதிக்கப்படுவது விவசாயிகளும், பொதுமக்களும் தான்.  உலகில் அதிகமாக வெங்காய உற்பத்தியாகும் நாடுகளில் ஒன்று இந்தியா. அரசுப் புள்ளிவிப ரங்களின்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு 12.1 மில்லி யன் டன்னாக இருந்த வெங்காய உற்பத்தி,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்ட தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் பலனாக, 21.5மில்லியன் டன்னாக அதிகரித்தது. ஆனால் விளைச்சல் அதிகமாக  இருக்கும்போது வெங்காயத்தை பெருமளவிற்கு பாதுகாத்து வைப்பதற்கான எந்த முறையான வசதியையும் அடுத்து வந்த மோடி அரசு உருவாக்கவில்லை என்பது ஒரு அடிப்படையான பிரச்சனையாகும். இது பதுக்கல்காரர்களுக்கும் பெரும் மொத்த வியாபாரிகளுக்கும் சாதகமாக அமைகிறது. விவசாயிகளும் பொதுமக்களும் துயரத்தில் சிக்குகிறார்கள். வெங்காயத்தால் ஏற்பட்ட கண்ணீரின் கதை இதுவே.

;