headlines

img

ஊதியம் வழங்கவே துப்பில்லையாம்..!

தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன. ஆனாலும் கூட ஒன்றிய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் கூடியது. பொது வாக காபந்து அரசாக இருக்கும் ஆட்சியில் புதிய முடிவுகள் எடுக்கக் கூடாது. அப்படியிருந்தும் கூடிய அமைச்சரவையில் மகாத்மா காந்தி  ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர் களுக்கு ஊதியத்தை ‘உயர்த்திட’ முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. அதை உடனடியாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று ஒன்றிய அரசு அறிவித்தும் விட்டது.

இந்த அறிவிப்பின்படி வெறும் ரூ.7 முதல்  ரூ.31 வரை தான் உயர்வு கிடைக்கும். தமிழ் நாட்டில் ரூ.25 கிடைக்கும். அப்படியானால் இனி ஊதியம் எவ்வளவு? ரூ.319 தான்.

நாடு முழுவதும் இந்த திட்டத்தின் வேலை நாட்களையும் ஊதியத்தையும் அதிகரிக்கச் சொல்லி தொழிலாளர்களும், அரசியல் கட்சி களும் போராடிக் கொண்டிருக்கின்றன. 200 நாள் வேலையும் 600 ரூபாய் ஊதியமும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகின்றன. அதுபற்றி எந்த அசைவும் காட்டுவதில்லை மோடி அரசு.

அதுமட்டுமல்ல, இருக்கிற வேலையைக் குறைப்பதும், பறிப்பதுமாக நடந்து  கொண்டி ருக்கும் ஒன்றிய அரசு, அந்த வேலை  பார்த்தவர்களுக்கு காலாகாலத்தில் ஊதியத்தை வழங்கியிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

தமிழ்நாட்டுக்கு ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப் பாக்கி எவ்வளவு உள்ளது என்று நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் எழுப்பிய கேள்விக்கு 29.11.23 அன்று கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதில் ரூ.261.85 கோடி பாக்கி.

அடுத்த மாதம், அதாவது டிசம்பர் 12 ஆம் தேதி மற்றொரு கேள்விக்கு கிடைத்த விடை. ஊதிய நிலுவைத் தொகை ரூ.261 கோடி. பொருட்களுக்கான நிலுவைத் தொகை ரூ.106 கோடி என மொத்தம் 367 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் தரப்படவில்லை.

இது தமிழ்நாட்டின் கதை என்றால் மற்ற மாநிலங்களின் நிலை என்ன? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை ரூ.6,366 கோடி. அதற்கு முந்தைய ஆண்டில் 14.12.2022 இல்  ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை ரூ.10,150 கோடி.  இது தான் ஊரக வேலைத் திட்டத்தொழிலாளர் களின் பால் பாஜக அரசு காட்டும் அக்கறை.