சனாதன கருத்தியல்வாதியும், மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான சாவர்க்கர் பிறந்த நாளில் இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தின் தலைவரான குடியரசுத் தலைவ ரையோ, மாநிலங்களவையை தலைமையேற்று நடத்தும் குடியரசுத் துணைத் தலைவரையோ அழைக்காமல் முடியாட்சிக் காலத்தின் பதவியேற்பு விழா போல பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் முன்னிறுத்தி இந்த விழா நடந்து முடிந்துள்ளது.
சோழர் கால பாரம்பரியம் என்று புனைந்து ரைத்து, தமிழக சைவ மடாதிபதிகளை அழைத்து, செங்கோலைப் பெற்று விழாவை நடத்தி யுள்ளார் பிரதமர். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என்று சிலர் பிதற்றுவது அர்த்த மற்றது. செங்கோல் அறத்தின் அடையாளம், நீதியின் குறியீடு என்றெல்லாம் சிலர் நீட்டி முழக்குகின்றனர். மன்னராட்சி கால பழக் கங்களை மக்களாட்சிக் காலத்தில் உயிர்ப்பிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், மக்கள் உரிமையையும் இழிவுபடுத்துவதாகும்.
ஆனால், முன் வைக்கப்பட்ட எந்தவொரு கருத்துக்கும் ஒன்றிய அரசு செவி சாய்க்க வில்லை. கொண்டதே கோலம், கண்டதே காட்சி என தானடித்த மூப்பாக தர்பார் நடத்தி முடித்துள்ளது ஒன்றிய அரசு.
நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நாளில் இந்த நாட்டுக்கு பதக்கங்களால் பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகள் தலை நகர் தில்லியில் நடந்த போராட்டத்தின் போது அடித்து நொறுக்கப்பட்டுள்ளனர். ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் எதுவும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதே விடுதலையின் துவக்க மாக இருந்தது. ஆனால் மல்யுத்த வீராங்கனைக ளின் கைகளில் இருந்த மூவர்ணக் கொடியை காவல்துறையினர் பறித்து எறிந்துள்ளனர். இதுதான் ஜனநாயகத்திற்கு, தேசிய கொடிக்கு, நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைக ளுக்கு தருகிற மரியாதையா?
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாஜக எம்.பி., பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைநகர் தில்லியில் விளையாட்டு வீராங்கனைகள் போராடி வருகிறார்கள். பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு ஆதரவு தரு கின்றனர். பாலியல் குற்றவாளியை கைது செய்ய மறுக்கும் தில்லி காவல்துறை, அறவழிப் போராட்டத் தில் ஈடுபட்ட வீராங்கனைகளை கைது செய்து வலுக்கட்டாயமாக அகற்றுவது அராஜகம்.
நீதி வழுவா நெறிமுறையின்படி ஆள்பவர் போல மோடி செங்கோல் ஏந்த, மறுபுறத்தில் வீராங்கனைகள் மீது வன்முறை ஏவப்படுகிறது. ஒரு பாலியல் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கு மாறு கோருவது குற்றமா? தூசுபடிந்த செங் கோலை எடுத்து வந்து கொடுத்த முதல் நாளி லேயே செங்கோலில் மாசுபடிந்து விட்டதே.