கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பாஜக அரசின் சாதனை என்று தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வாக்கு வங்கி அரசி யலுக்காக பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எந்த நிலைக்கும் இறங்குவார்கள். அரசியல் சட்ட நெறிகளைப் பற்றியோ, தேர்தல் நடத்தை விதி களைப் பற்றியோ கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும்.
கர்நாடகத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. அந்த ஆட்சியில் எந்தப் பணியாக இருந்தாலும் 40 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்பதை அறிவிக்கப்படாத விதியாகவே பசவ ராஜ் பொம்மை அரசு மாற்றிவிட்டது. இதுதான் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மையமாக இருந்தது.
பிரதமர் மோடியும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும் இதை திசை திருப்ப அயோத்தி யில் ராமர் கோவில், பொது சிவில் சட்டம், மத மாற்ற தடைச் சட்டம் என தங்களது வழக்கமான ஆயுதத்தை கையிலெடுத்தனர். ஆனால் இது எதுவும் வேலை செய்யவில்லை என்றவுடன், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தில் இறங்கினர்.
அமித்ஷா தனது பரப்புரையில் கர்நாடக பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கான நான்கு சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டது என்றும் அதற்கு பதிலாக பொருளாதாரரீதியாக பின்தங்கிய முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு கிடைக்கிறது என்றும் தொடர்ந்து பேசி வந்தார்.
கர்நாடக பாஜக அரசு இஸ்லாமியர்களுக் கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது. ஆனால் இஸ்லாமி யர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டது என்று அமித்ஷா பேசியதை உச்சநீதி மன்றம் கண்டித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது இவ்வாறு பேசுவது நீதிமன்ற அவமதிப்பு என அமித்ஷாவை நீதிபதி கள் இடித்துரைத்துள்ளனர்.
ஆனால் அமித்ஷா இதையெல்லாம் பொருட்படுத்தக்கூடியவர் அல்ல. ஒன்றிய ஆட்சியாளர்கள் நீதித்துறையை வளைத்து தங்களுக்கு சாதகமாக செயல்பட வைத்துள்ள தற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். இதற்கு இணங்க மறுப்பவர்களை இரக்கமில்லாமல் பழி வாங்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றம் இடித்துரைத்துள் ளது குறிப்பிடத்தக்கது. சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்கள் என்று யாரும் இல்லை என்பதை அமித்ஷா வகையறா உணர வேண்டும்.