headlines

img

பாஜகவின் இரட்டை வேடம்

தமிழ்நாடு சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டுமென்றும், இதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டு மென்றும் வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் சட்டப் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்திருப்பதன்மூலம் பாஜகவினர் தங்கள் இரட்டை வேட நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர். கர்நாடகத்தில் பாஜகவி னர் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று தொடர்ந்து அடம்பிடித்து வருகின்றனர். இரண்டு முறை அந்த மாநிலத்தில் நடைபெற்ற பந்த் போராட்டத்திற்கு பாஜகவினர் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கூறியபோதும் ஒரு சொட்டு நீர் கூட தரக்கூடாது என கர்நாடக மாநில பாஜகவினர் கூறுகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் கூறியுள்ள குறைந்தபட்ச அளவு கூட தமிழகத்திற்கு  தண்ணீர்  கிடைக்காத நிலையில் காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி வரு கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியில் ஒரு விவசாயி உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த பின்னணியில் தமிழ்நாட்டின் குரலை ஒருமனதாக கர்நாடகத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் எடுத்துச் சொல்லும் வகையில்தான் முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானம் அமைந்துள்ளது. தமிழகத்தின் நியாயத்தையும், விவசாயிகளுக்கும், உணவு உற்பத்திக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் முதல்வர் எடுத்துரைத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற்றியுள்ளன. 

ஆனால் தமிழக பாஜகவின் நிலை கர்நாடக பாஜகவின் நிலையை ஆதரிப்பதாக அமைந்துள்ளது. தமிழக முதல்வரின் தீர்மானத்தை ஆதரிக்க மறுத்து திமுக அரசு இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக பொய்யுரைக்கிறார் வானதி சீனிவாசன். நதிகள் தேசியமயம் எனும் உடனடி சாத்திய மில்லாத விசயத்தையும், மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தையும் தீர்மானத்தில் இணைக்க வேண்டுமென பாஜக வம்பு செய்து வெளிநடப்பு செய்துள்ளது. இது தமிழ்நாட்டின் நலனுக்கும், விவசாயிகளுக்கும் செய்துள்ள அப்பட்டமான துரோகமாகும்.