headlines

img

நுழைவைத் தடுக்க நுழைவுத் தேர்வா?

மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை க்கு பொது நுழைவுத் தேர்வு கொண்டு வருவதை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசு. கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளி, தாய்மொழி வழி பயிலும் மாண வர்களுக்கு மிகப் பெரிய தடையாக நீட் தேர்வு இருக்கிறது என்று கூறி தமிழகத்திற்கு இதிலி ருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக சட்டப் பேரவை இதுவரை இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட தீர்மானத்தை தமிழக ஆளுநர் திருப்பி அனுப் பினார். பேரவை மீண்டும் தீர்மானம் நிறை வேற்றி அனுப்பிய நிலையில், ஆளுநர் அதனை  ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில் மருத்துவப் படிப்பு மட்டுமின்றி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, இளம் அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக் கும் அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வு  கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள் ளது. புதிய கல்விக்கொள்கையின் அடிப்படை யில் அனைத்துக் கல்லூரிகளிலும் இதை நடை முறைப்படுத்த வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் திட்டம். அதற்கு முன்னோட்டமாகவே மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு எழுதுபவர்கள் சிபிஎஸ்இ பாடத் தின் அடிப்படையில்தான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். ஆனால் மாநிலங்களில் 80 சதவீதத்திற் கும் மேற்பட்ட மாணவர்கள் அந்தந்த மாநில பாடத்திட்டங்களில்தான் பயில்கின்றனர். இல்லாத ஒரு பாடத்திட்டத்திலிருந்து நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது இயற்கை நீதிக்கு எதி ரானது. மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்க ளில் படிப்பதை தடுக்கவே இந்த நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படுகிறதோ என்ற அச்சம் எழுகிறது.

இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானம் முற்றிலும் நியாயமானது. அனைத் துக் கட்சிகளும் முதல்வரின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாஜக மட்டும் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்துள்ளது நீட் விசயத்தில் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்வது போல இந்த விசயத்திலும் தமிழகத்திற்கு எதிரான நிலைபாட்டை பாஜக எடுத்துள்ளது. இந்தக் கட்சி  அனைத்து விசயங்களிலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் எதிராகவே நடந்து கொள்கிறது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையிலேயே ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தமிழகத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்க குழு அமைக் கப்பட்டிருக்கிறது. அதன் பரிந்துரைகள் பல்வேறு சிக்கல்களுக்கு  தீர்வு காணும் என நம்பலாம்.