உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப் பதிவு புதனன்று நடந்து முடிந்துவிட்டது. இப்போதும் கூட அடுத்த கட்ட வாக்குப் பதிவுக்கான பிரச்சாரத்தில் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவதைவிட மாடுகளின் பிரச்சனைகளை பற்றி தான் பாஜக அரசின் முதல மைச்சர் ஆதித்யநாத் பேசி வருகிறார். அயோத்தி மற்றும் பாரபங்கி ஆகிய இடங்களில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டங்களில், பசுக்களை பராமரிப்பவர்களுக்கு மாதம் ரூ.900 உதவித் தொகை அளிக்கப்படும் என்று புதிய அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்.
பாஜக அரசின் மீது தீரா கோபத்தில் இருக்கும் உத்தரப்பிரதேச விவசாயிகளை சற்று ஆற்றுப் படுத்தும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளி யிடப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் விவசாயிகளுக்கான வாழ்வாதாரங்களுக்கு தீர்வுகளை சொல்லாமல் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அறிவித்திருப்பது, ஏற்கெனவே பசுக்களின் பெயரால் உ.பி. பாஜக அரசு நடத்தியுள்ள மெகா ஊழல்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது. ஏற்கெனவே கோசாலைகள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் - பாஜக பிரமுகர்களுக்குத்தான் அரசின் நிதி பெரிய அளவுக்கு திருப்பிவிடப்பட்டிருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
உத்தரப்பிரதேச அரசு மட்டுமல்ல, ஒன்றிய மோடி அரசும், கடந்த ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட்டில் (2019 பிப்ரவரி 1) பசு பாதுகாப்பு என்ற பெயரில் 750 கோடி ரூபாயை ஒதுக்கியது. இந்த நிதி முழுவதும் பசு காவலர்கள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் - பாஜக பிரமுகர்கள் நடத்தும் அமைப்புகளுக்குத்தான் சென்றது. ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற பெயரில் ஒன்றிய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த நிதியுடன் ஒப்பிடும்போது அதே பட்ஜெட்டில் நாடு முழு வதும் தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்காக அறிவிக்கப்பட்ட 500 கோடி ரூபாய் மிக மிக குறை வானது என்பது கூறத் தேவையில்லை. 42 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அறிவிப்பதற்கு பதிலாக மோடி அரசு பசுக்களின் பாதுகாப்பை முதன்மையாக முன்னிறுத்தியது.
அதே பாதையில், தற்போது வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கும் ஆதித்யநாத் அரசும் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரச்சாரத்தில் பேசிய ஆதித்யநாத், பசுக்களை கொல்ல அனுமதிக்க மாட்டோம்; விவசாயிகளின் பயிர்கள் அழிவதையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதோடு, பசுக்களை பாதுகாப்ப வர்களுக்கு வாக்களியுங்கள். கொல்பவர்களுக்கு அல்ல என்றும் பேசியுள்ளார். உ.பி. தேர்தலின் பிரச்சார துவக்கத்தில் அவர், இது 80 சத வீதத்திற்கும், 20 சதவீதத்திற்கும் இடையே நடக்கும் போர் என்று கூறினார். அதையே தற்போது வேறு வார்த்தைகளில், பசு காவலர்கள் - பசுவை கொல்பவர்கள் என்று பேசியிருக்கிறார். இது வெறுமனே பிரச்சார பேச்சு அல்ல. மாட்டிறைச்சி உண்ணும் சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான பகிரங்கமான வன்முறை தூண்டுதலே ஆகும். உ.பி. இளைஞர்கள் லட்சக்கணக்கில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை பேசாமல் திசை திருப்பும் பாஜக ஆட்சியாளர்களை இன்னும் சில நாட்களில் உ.பி. மக்கள் முற்றாக வீழ்த்துவார்கள் என்பது உறுதி.