headlines

img

தேர்தல் ஆணையமா? திருகல் ஆணையமா?

மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் துவங்கியதிலிருந்தே தேர்தல் ஆணையம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரு கிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு உட்பட முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அடிக்கடி பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் தேதி குறித்தும், முதல் கட்ட தேர்தல் குறித்தும் அவருக்கு முன்கூட்டியே தெரிந்ததால்தான் அந்த மாநிலங்களில் முதலில் பிரச்சாரம் செய்த தாக சர்ச்சை எழுந்தது. ஆனால் இதுகுறித்து தேர்தல் ஆணையம் மவுனம் சாதித்தது.

அடுத்து வாக்குப்பதிவு சதவீத விபரங் களை அறிவிப்பதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்தன. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவின் போதும் முன்னுக்குப் பின் முரணான தகவல் களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேவையற்ற தாமதமும் நிகழ்ந்தது. 

இந்த நிலையில் ‘இந்தியா கூட்டணி’ கட்சி கள் தேர்தல் ஆணையர்களை சந்தித்து வாக்குப் பதிவு சதவீதத்தை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என்றும் பதிவான வாக்குப்பதிவு விப ரங்களை 17ஏ படிவத்தின் அடிப்படையில் வெளி யிட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆதாரமற்ற புகார்களை கூறுவதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் கடிதம் எழு தப்பட்டுள்ளது. அறிவுரை என்ற பெயரில் இந்த  கடிதம் அமைந்திருந்த போதும் இதன் உள்ள டக்கம் மிரட்டல் தொனியிலேயே அமைந்துள்ளது. 

வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவிப்பதில் முரண்பாடு ஏற்பட்டது உண்மைதானே! முன்னெப் போதும் இல்லாத வகையில் முன்னுக்குப் பின் முரணான தகவல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது சந்தேகத்திற்குரியதுதானே? இதை ஆதாரமற்ற புகார் என்று தேர்தல் ஆணையம் எப்படி கூறுகிறது?

பிரதமர் மோடி தனது பரப்புரையில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் குறித்து தொடர்ச்சியாக வெறுப்பு அரசியலை விதைத்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் செய்த போதும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் சில நாட்கள் கழித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்த சிறு எச்சரிக்கையைக் கூட தேர்தல் ஆணையம் பிரதமருக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் புகார்  மீது மட்டும் உடனடியாக எதிர்வினை ஆற்று வது ஏன்? தேர்தல் ஆணையத்தின் சுயேச்சைத் தன்மை பெருமளவு கேள்விக்குறியாகியுள்ளது. நேர்மையான, நியாயமான தேர்தலை நடத்தி முடிக்கும் பெரும் கடமையை ஆணையம் நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.