கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி, யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு விலை உயர்ந்து விட்டது. முன்பெல்லாம் விலை உயர்வுக்கு ஏதாவது ஒரு முக்கிய காரணம் இருக்கும். தற்போதெல் லாம் எவ்வித காரணமும் இல்லாமல், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இப் பொருட்களின் விலை, வழக்கத்தை காட்டிலும் அதிகரித்துள்ளதற்கு ரஷ்யா- உக்ரைன் மோதலை தவிர்த்து வேறு நியாயமான காரணங்கள் ஏது மில்லை. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், கட்டு மானத் தொழிலே முடங்கும் நிலை ஏற்படும்.
கடந்த நான்கு மாதங்களாக ஸ்டீல் கம்பிகளின் விலை 35 முதல் 42 விழுக்காடு வரை உயர்ந்துள் ளது. அவற்றின் ஒரு டன் விலை ரூ.60ஆயிரத்தில் இருந்து ரூ.70ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.410 இருந்து ரூ.450 ஆகவும் ஒரு செங்கல்விலை ரூ.9.60 லிருந்து ரூ.11.50 ஆகவும் எம்.சேண்ட் விலை (ஒரு யூனிட்) ரூ.2,800 லிருந்து ரூ. 3,500க்கும் உயர்ந்துள்ளது. பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. செராமிக் டைல்ஸ், ஜன்னல் பிட்டிங்குகள், சாவி ஆகியவற்றின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
சென்னை போன்ற நகரங்களில் ஆயிரம் அடி அளவு கொண்ட வீட்டின் விலை 2019 ஆம் ஆண்டை விட 2022ல் ரூ.5லட்சம் அதிகரித்துள் ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சத் திற்கு கிடைத்த வீடு தற்போது ரூ.25லட்சமாக விற் கப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் மோதல் காரண மாக ஸ்டீல் கம்பிகளின் விலை உயர்ந்துள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே அதை கட்டுப்படுத்த உடனடியாக ஸ்டீல் கம்பிகள் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும்.
இந்த விலை உயர்வு கட்டுமானத்துறையை பெரிதும் பாதித்துள்ளது. விலை உயர்வு காரணமாக சிறு கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணியை தொடர்ந்து மேற்கொள்ளமுடியாமல் தவிக்கின் றன. பெரிய நிறுவனங்கள் இந்த விலைஉயர்வை வீடு வாங்குவோர் தலையில் சுமத்துகின்றன. “முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்வு உள்ளதாகவும் இது நியாயமில்லாத விலை உயர்வு’’ என்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் தெரிவிக்கிறார்கள்.
கொரோனா தொற்றுக்கு பின்னர் கடந்த சில மாதங்களாக கட்டுமான பணிகள் வேகம் எடுத் துள்ள நிலையில் இந்த விலை உயர்வு தொழிலை முடக்கிப்போட்டுவிடும். கட்டுமான தொழிலை நம்பி தமிழகத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தொழில் முடங்கி னால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய மாநில அரசுகள் விரைந்து செயல்படுவது அவசியமாகும். சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த சிமெண்ட் உற்பத்தியை அதிகரித்து நியாயமான விலையில் அரசே விற்பனை செய்யவேண்டும்.