headlines

img

இடிக்கப்பட்டது பாபர் மசூதி மட்டும் தானா?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர் கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 31 பேர் சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அலகா பாத் உயர்நீதிமன்றம் லக்னோ கிளை தள்ளுபடி செய்துள்ளது. உலகையே உலுக்கிய ஒரு கொடிய  நிகழ்வு தொடர்புடைய வழக்கில் கடைசி வரை நீதி நிலை நிறுத்தப்படவே இல்லை. 

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி  ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரத்தால் கூட்டப்பட்ட  கும்பலால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. அந்த நேரத்தில் முரளி மனோகர் ஜோஷி,  உமாபாரதி மற்றும் விஎச்பி தலைவர்கள் அங்கு இருந்ததை பல்வேறு ஊடகச் செய்திகள் தெரி வித்ததோடு, புகைப்படங்களும் வெளியாகின. 

முதலில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டபின்னர் 49 வழக்குகளாக விரிவாக்கப் பட்டன. வழக்கு நடைபெறும் போதே, 17 பேர் இறந்துவிட தீர்ப்பு வெளியானபோது 32 பேர் மட்டுமே மிஞ்சினர். 27 ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. 

காலதாமதம் ஆகிவிட்டதால் வழக்கை கைவிட வேண்டும் என்று வழக்கை நடத்திய சிபிஐ கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்த தோடு வழக்கை துரிதமாக நடத்துமாறும் உத்தர விட்டது. 

சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விநோதத் தீர்ப்பை வழங்கியது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை கோவில் கட்ட ஒப்படைக்குமாறும் வேறு இடத்தில் மசூதி கட்ட இடம் ஒதுக்குமாறும் கூறியது. மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, வழங்கப்பட்டது தீர்ப்பேயன்றி நீதியல்ல என விமர்சித்தது. 

ஆற அமர விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து 2020 செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதியை இடித்தது திட்டமிட்ட சதியல்ல என்றும் இயல்பாக நடந்த ஒன்று என்றும் நீதிமன்றம் கூறியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது என்றும் நீதிமன்றம் கூறியது.

எல்.கே.அத்வானி நடத்திய ரத யாத்திரை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர் பேசிய வெறிப் பேச்சுகள், நாடு முழுவதுமிருந்து கரசேவகர்கள் என்ற பெயரில் திரட்டப்பட்ட கூட்டம் என எதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. வழக்கை நடத்திய சிபிஐ மிகுந்த அலட்சியத்தோடு வழக்கை அணுகியது.

குறைந்தபட்சம் இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்யக்கூட இல்லை. இந்த நிலையில் மேல்முறையீடு செய்தவர்கள் பாதிக் கப்படாதவர்கள் என்று கூறி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் நீதி பரிபாலன முறையையே கேலிக் கூத்தாக்கும் வகையில் இந்த வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. இப்போதேனும் வழக்கை நடத்திய சிபிஐ மேல் முறையீடு செய்ய முன்வருமா?