headlines

img

இது ஆளுநருக்கு அழகல்ல!

அரசமைப்பு சட்டத்தின் படி ஆளுநர் என்பவர் அந்த மாநிலத்தின் தலைவர் ஆவார். அந்த பொறுப்பை உணர்ந்து செயல்படுவதுதான் ஆளுநர் பதவிக்கு அழகு. ஆனால் அதை விடுத்து ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் போன்று விஷத்தைக் கக்கி, வெறுப்பை உமிழ்வது அழகல்ல.
சென்னையில் நடைபெற்ற 90 ஆம் ஆண்டு ஹரிஜன சேவக் சங்க ஆண்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசியிருக்கிறார். அப்போது   தமிழகத்தில் 24 சதவிகிதம் ஹரிஜனங்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகள் 13 முதல் 14 சதவிகிதம் மட்டுமே பள்ளிக்குச் செல்கின்றனர் என்று உள்நோக்கத்தோடு  உண்மைக்கு மாறாகப் பேசியிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வியில் 99.42 என்ற இலக்கை அடைந்திருக்கிறோம். அதிலும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 97.73 சதவிகிதத்தைத் தாண்டிய நுழைவு விகிதம் இருக்கிறது. அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் பட்டியலின மக்கள் நுழைவு விகிதம் 13 முதல்14 சதவிகிதமாக இருக்க முடியும் ? உண்மையில் பட்டியல் சாதியினர் மத்தியில் உயர் கல்வி விகிதம் 39.6 சதவிகிதம். இது தேசிய சராசரியை விட 16.2 சதவிகிதம் அதிகம். இந்த விபரங்கள் ஒன்றிய அரசின் வெளியிடும் புள்ளிவிவரங்களிலும் இருக்கிறது. உண்மை இவ்வாறிருக்க ஆளுநர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பொறுப்பற்று பேசுவது முறையல்ல.
ஆளுர் அடுத்துப் பேசியிருக்கும் விஷயங்களும் உள்நோக்க கொண்டவையாக, உண்மைக்குப் புறம்பானதாகவும் இருக்கிறது. சமூக நீதி பற்றிப் பேசுவதும், வளச்சி பற்றிப் பேசுவதும் வெற்று கூச்சல்தான் எனவும் கூறியிருக்கிறார். இதே ஆளுநர்தான் சனாதன தர்மத்தின் வழியே இந்த நாடு உருவானது. வேற்றுமையில் ஒற்றுமையைத்தான் சனாதனம் வலியுறுத்துகிறது என்றும் ஏற்கனவே கூறியிருந்தார். இப்போது ஒரு கேள்வி எழுகிறது. பட்டியலின மக்களைப் பற்றி உண்மையிலேயே ஆளுநர் கவலைப் படுவாரானால் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பிரதான மண்டபத்தில் பட்டியலின மக்களை அழைத்துச் சென்று தேவாரத்தை ஓதச்செய்யத் தயாரா ?
ஒரு புறம் சனாதானத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு மறுபுறம் பட்டியலின மக்களைப் பற்றிக் கவலைப்படுவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்படுவதை போன்றது ஆகும். பொய்கள் அமர்வதற்கு ஒருவன் சிம்மாசனம் அமைத்தால் அது உண்மைக்குத் தூக்கு மேடை அமைப்பதாகும் என்பதையும் அறிந்தவர்கள்தான் தமிழக மக்கள். தமிழகத்தில் பொய்கள் நீண்ட காலம் நிலைத்ததாக வரலாறு இல்லை என்பதையும்  ஆளுநர் கவனத்தில் கொள்ள வேண்டும்.  
ராம ராஜ்ஜியம் அமைப்போம், திருக்குறள் ஒரு ஆன்மீக நூல், துப்பாக்கியைத் தூக்குவோருக்குத் துப்பாக்கியால்தான் பதில்சொல்ல வேண்டும். சமூக நீதி, வளர்ச்சி என்பதெல்லாம் வெற்று கூச்சல் என்று எதை வேண்டுமானலும் பேசி செல்ல ஆளுநர் அமந்திருப்பது கமலாலயமல்ல, ராஜபவன் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.