இந்திய விஞ்ஞானிகளின் 15 ஆண்டு கால தொடர் முயற்சியின் பலனாக சந்திரயான் -3 இன்று விண்வெளி ஆய்வில் மாபெரும் வர லாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது.
இந்தியாவின் சந்திரயான் - 3 நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆய்வுப்பணியைத் துவங்கியிருக்கிறது. இந்த மகத்தான சாதனை உலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்திருக்கிறது. இந்த சாதனையை படைத்திட்ட இஸ்ரோவின் விஞ்ஞானிகள், ஊழியர்கள் அனைவரையும் ஆரத்தழுவிப் பாராட்டுவோம்.
பூமியிலிருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரனின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியைத் துவக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. இங்கிருந்து அனுப்பும் சிக்னல் சந்திரனுக்கு சென்றடை யவே 1.15 வினாடிகள் ஆகும். அதனால் ரிமோட் கன்ட்ரோல் போன்று பூமியிலிருந்து விண் கலத்தை இயக்கிட முடியாது. அதனால்தான் இந்தமுறை பல்வேறு துறைகள் இணைந்து புதிய அறிவியலை இஸ்ரோ முன்னெடுத்திருக்கிறது. அதாவது சந்திரயான்-1 மற்றும் சந்திரயான் -2 ஆகிய திட்டங்களில் பெற்ற அனுபவத்தையும், அதில் ஏற்பட்ட தடங்கல்களையும் சரிசெய்து முன்னேறும் வகையில் மிக நுட்பமாகத் திட்டமிட்டு வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக உந்து கலன் (ப்ரபல்சன் மாட்யூல்), தரையிறங்கும் கலன்(லேண்டா் ), ஊர்திகலன் (ரோவா்) ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கிடும் வகையில் சந்திரயான் -3 அனுப்பப்பட்டது. அதிலும் ஒவ்வொரு கல னுக்குள்ளும் அதன் தன்மைக்கேற்ப செயற்கை நுண்ணறிவுடன் தானே செயல்படும் வகையில் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுச் செயல்படுத் தப்பட்டிருக்கிறது. ஒருவேளை உந்து விசை கொடுப்பதிலோ, தரையிறங்குவதிலோ, அல்லது புகைப்படம் எடுப்பதிலோ ஒன்று பழுது ஏற்பட் டால் மற்றொன்று இயங்கும் வகையில் வடிவ மைக்கப்பட்டதுதான் இதன் சிறப்பு ஆகும்.
வேகக்கண்காணிப்பு கருவியுடன் 7 வகை யான சென்சார்கள் மற்றும் கேமரா நுட்பங்கள் வாயிலாக - லேண்டர் விக்ரம் மெதுவாகத் தரை யிறக்கப்பட்டது. இதன் ஆய்வு உலக நாடு களுக்கே வழிகாட்டுவதாக அமையும்.
பூமியில் எளிதில் கிடைக்காத ஹீலியம்-3 உள்ளிட்ட அரிய வகை கனிமங்கள் நிலவில் இருக்கின்றன. இந்தியாவின் மொத்த ஆற்றல் தேவைக்கு 1டன் ஹீலியம்-3 இருந்தால் போதும். உலகின் நான்காவது தொழிற்புரட்சிக்குச் சந்திர யான் -3 ஆய்வுகள் வழிகாட்டும். சரித்திரம் படைக்கும் மூன்று சந்திரயான் ஆய்வுகளுக்கும் திட்ட இயக்குநர்களாக இருந்து வழிநடத்திய தமிழ்நாட்டின் மகத்தான விஞ்ஞானிகள் மயில் சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா, தற்போதைய திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு இரட்டிப்பு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் உரித்தாக்குவோம்!