தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 32 சட்ட முன் வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப் படவிருக்கின்றன. இந்த சட்ட முன்வடிவுகளில் மாநில உரிமைகளில் கை வைக்கும் கூட்டுறவுத் துறை தொடர்பான சட்டமும் அடங்கியிருக்கிறது.
ஆனால் வேளாண் விளை பொருட்களுக் கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான சட்டத்துக்கு இடம் இல்லை. மாறாக, குடியரசு தலைவர் தேர்தல் அன்று வேளாண் விளை பொ ருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை மேலும் திறன் கொண்டதாக்க முன் னாள் வேளாண் துறைச் செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசின் அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த ஐந்து மாநில தேர்தல் சமயத்தில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் ஒருவர் அரசுக்கு பரிந்துரை யாக வேளாண் விளை பொருள் ஆதார விலை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றலாம் என்று கூறி யிருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் ஒன்றிய அரசோ அதுபற்றி கவலைப்ப டாமல் அந்த உச்சநீதிமன்றக்குழுவின் அறிக்கை யை வெளியிடாமல் அமுக்கி வைத்திருந்தது.
ஆனால் தேர்தல் வெற்றியையே கவனத்தில் கொண்டு விவசாயிகளின் வாக்குவங்கியை மனதில் வைத்து நடைமுறைக்குப் புறம்பாக, அரசு வெளியிடாத அறிக்கையில் உள்ள அம்சங்கள் பற்றி குழுவின் உறுப்பினரை பேட்டி மூலம் சொல்ல வைத்தது. ஆனால் உண்மையில் அந்தக்குழு வின் பரிந்துரையை நிறைவேற்றுவதற்கான எண்ணம் இருக்குமானால் ஒன்றிய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் ஒன்றிய அரசுக்கு வேளாண் விளை பொருட்களுக்கான ஆதரவு விலை வழங்குவ தற்கு துளியளவும் எண்ணம் இல்லை. அவர்களது எண்ணமெல்லாம் விவசாயத்துறையை கார்ப்ப ரேட் நிறுவனங்களின் கரங்களில் சிந்தாமல் சிதறாமல் ஒப்படைப்பதிலேயே உள்ளது.
அதனால்தான் இப்போது அமைக்கப் பட்டுள்ள குழுவிலும் விளை பொருள் நிர்ணயம் பற்றி மட்டும் முடிவு செய்வது என்றில்லாமல் இயற்கை விவசாயம், குடிநீர் பாசனத்திட்டம், புதிய பயிர்கள் மற்றும் பயிரிடும் முறைகள் உள்ளிட்ட வற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்தக்குழு ஆராயும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையம் ஏற்கெனவே அளித்த பரிந்து ரையின் அடிப்படையில்தான் 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது பாஜக தேர்தல் வாக்குறுதி வழங்கியது. ஆனால் எட்டாண்டுகளாக இன்னும் அதை அமல்படுத்த மனமில்லாமல் குழு அமைத்தே குழி பறிக்கிற வேலையை செய்கிறது பாஜக ஒன்றிய அரசு. ஆனால் இந்திய விவசாயிகள் தங்களை ஏமாற்றும் ஒன்றிய அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.