headlines

img

எஜமான விசுவாசத்தின் எல்லைக்கே செல்வதா?

விவசாயிகளையும், விவசாயத்தையும் வேட்டையாடுவதில் மத்தியில் உள்ள மோடி அரசும், மாநிலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசும் போட்டி போடுகின்றன. வேளாண்துறையை கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றும் வகையிலும், அவர்களது விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதை தடுக்கும் வகையிலும், மூன்று மசோதாக்களை மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில் சிலசட்டங்கள் அவசர அவசரமாக கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் ஒன்று, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தமாகும். கிராமங்கள், நகரங்கள் அமைப்பு மற்றும் விஸ்தரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்றபிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசுநினைத்தால், ஒருவருடைய நிலம் அல்லது கட்டிடத்தை எந்தவிதமான ஆலோசனையுமின்றி கையகப்படுத்த முடியும். இது நில உரிமையாளர்களின் உரிமையை அப்பட்டமாக பறிக்கும்செயலாகும்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு மசோதாவின் மூலம் தமிழ்நாடுவேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்தும்சட்டம் திருத்தப்பட்டது. இதன்படி, தமிழகத்தில்செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை சீர்குலைக்க வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடைமுறைப்படி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில்தான் வேளாண்விளைபொருட்களை வியாபாரிகள் கொள்முதல்செய்ய வேண்டும். ஆனால் இந்த சட்டத்திருத்தம் வியாபாரிகளோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ நேரடியாக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்ய முடியும். இதன்மூலம் அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை வாங்கும் நிலை ஏற்படும்.

ஏற்கனவே பீகாரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கலைக்கப்பட்டு, விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், தமிழக அரசுமத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றும் வகையில், இந்தத் திருத்தம்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அதை நடைமுறைப்படுத்தும் வகையில், சட்டத்திருத்தத்தை அதிமுகஅரசு கொண்டு வந்துள்ளது விவசாயிகளுக்கு இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும். எஜமான விசுவாசத்தின் எல்லையைத் தொட எடப்பாடிபழனிசாமி அரசு துடிப்பதையே இது காட்டுகிறது. 

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்துறை சட்டங்களையும் அதன் சாயலில் தமிழகஅரசு நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்தங்களையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும். இல்லையேல், தமிழகம் பாலைவனமாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாகவும் மாற்றப்பட்டு விடும்.