நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைக ளில் வாக்களிக்க லஞ்சம் பெறுவதில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூய்மையான அரசியலுக்கு வித்திடப்படும் என்று சென்னையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நீட்டி முழக்கியுள்ளார். உண்மையில் இந்த தீர்ப்பு பாஜகவுக்கு எதிரான ஒன்று என்றே கூற வேண்டும்.
நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு சட்டப் பேரவைகளில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியமைத்த பெருமை பாஜகவுக்கே உண்டு. அண்மையில் இமாச்சலப் பிரதேசத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை கடத்திச் சென்று மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்க ளிக்கச் செய்தது யாருடைய கட்சி? சாட்சாத் நரேந்திர மோடியின் கட்சிதான்.
இதேபோன்று வெற்றி பெறாத மாநிலங்க ளில் கூட எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவ தை ஒரு கலையாகவே பயின்றுள்ள கட்சியின் தலைவர் ஊழல் கறையே படியாதவர் போல பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
ஊழல் செய்ய விடமாட்டேன் என்று சென்னைக் கூட்டத்தில் ஓங்கி முழங்கியுள் ளார் பிரதமர். இவர் இவ்வாறு பேசிக்கொண்டி ருக்கும் அதே நேரத்தில் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கு ஜூன் மாதம் வரை அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு போடுகிறது. அதாவது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்குள் இந்தப் பட்டியல் வெளியா குமானால் தேர்தல் பத்திரம் மூலம் அதிகமாக கார்ப்பரேட் முதலாளிகளிடம் வாரிச் சுருட்டியது பாஜகதான் என்ற உண்மை அம்பலமாகிவிடும் அல்லவா?
கொரோனா காலத்தில் பிரதமர் நிவாரண நிதியை புறக்கணித்து பிஎம் கேர்ஸ் என்ற திட்டத்தை அறிவித்து அதற்கு நிதி அளிக்கு மாறு கூறியது ஏன்? அந்தத் திட்டத்திற்கு வந்த நிதி எவ்வளவு என்று கணக்கு கேட்டதற்கு அது தனியார் அறக்கட்டளை. அந்தக் கணக்கை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மூடி மறைத்தது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையா?
ரபேல் விமான பேர ஊழலில் ஈடுபட்டது யார்? பிரதமரின் நெருங்கிய கூட்டாளியான அதானி தொடர்பாக ஹிண்டன் பர்க் நிறுவனம் அம்பலப்படுத்திய மோசடியை மூடி மறைத்தது யார்? சிஏஜி அம்பலப்படுத்திய பெரும் முறை கேடு குறித்து விசாரிக்கக்கூட மறுத்தது ஏன்? ஒன்றிய பாஜக அரசின் தலை முதல் கால் வரை ஊழல் சேறு அப்பிக் கிடக்கிறது. இந்த லட்ச ணத்தில் பிரதமர் ஊர் ஊராகப் போய் ஊழலுக்கு எதிராக சண்டமாருதம் செய்வதைப் பார்த்து மக்கள் நகைக்கிறார்கள்.