மதிய உணவுத் திட்டத்தின் மூலம் இந்தியா வுக்கே வழி காட்டியாக திகழ்ந்த தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
“வயிற்றுக்கு சோறிட வேண்டும்- இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்/ பயிற்றி பல கல்வி தந்து/ இந்த பாரை உயர்த்திட வேண்டும்” - என்று பாடினார் மகாகவி பாரதியார்.
1920 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்த சர்.பிட்டி தியாகராயரால் சென்னையில் நாட்டிலேயே முதன் முறையாக மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை மாமன்ற உறுப்பினராக இருந்த சிந்தனை சிற்பி சிங்காரவேலர் இந்த மதிய உணவுத்திட்டத்தின் முன்னோடியாகவும் விளங்கினார்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது மாநில அளவில் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத் திட்டம் தமிழக கல்வி வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடி யாத உண்மை. அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சத்துணவு திட்டம், கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது முட்டை யுடன் கூடிய சத்துணவு என தொடர்ந்து தற்போது வாரத்திற்கு ஐந்து முறை சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள் ளன என ஆய்வுகள் கூறுகின்றன. வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மதிய உணவு என்பது அவர்களது உடல் நலத்தை மட்டுமின்றி அறிவுத்திறனையும் வளர்க்கும் திட்டமாக விளங்குகிறது.
இந்நிலையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவ, மாணவியர் பலன் பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
இதன்படி கடந்த மே மாதம் 7ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி காலை சிற்றுண்டி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அரசுப் பள்ளிக்கு வரும் குழந்தை களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு இடை நிற்றலையும் குறைக்க பயன்படும்.
ஒற்றைப் பண்பாட்டை திணிக்க முயலும் சனாதனவாதிகள் சத்துணவில் முட்டை வழங்கப்படுவது குறித்து முணுமுணுக்கின்றனர். மரக்கறி உணவையே வழங்க வேண்டுமென கூறு கின்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளத்தில் மதிய உணவில் ஒரு நாள் இறைச்சி உணவு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும் பகுதி குடும்பங்கள் இறைச்சி சாப்பிடும் குடும்பங்களே ஆகும். எனவே தமிழக அரசு விரும்பும் மாணவ, மாணவியருக்கு மட்டும் இறைச்சி உணவு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு பன்முகப் பண்பாட்டு நடவடிக்கையாகவும் அமையும்.